இந்தியில் ’த்ரிஷ்யம் 3’ குறித்த செய்தி வெளியாகி ரசிகர்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் இயக்குநர் ஜீத்து ஜோசப்.
வரும் அக்டோபரில், ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் ‘த்ரிஷ்யம் 3’ படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இந்த அறிவிப்பு ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியது. இதனிடையே, இந்தியில் ‘த்ரிஷ்யம் 3’ திரைப்படம் அக்டோபரில் படப்பிடிப்பு தொடங்கி, அடுத்த ஆண்டு காந்தி ஜெயந்திக்கு வெளியாக இருப்பதாக செய்திகள் வெளியாகின. இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்த குழப்பம் தொடர்பாக ஜீத்து ஜோசப் அளித்துள்ள பேட்டியில், “’த்ரிஷ்யம் 3’ படத்துக்கான கதை முடியும் நிலையில் இருக்கிறது. இந்தி பதிப்பு வேறொரு கதை என்று செய்திகள் வெளியாகி இருக்கிறது. அது உண்மையல்ல. இந்திப் படமும் எனது கதையை அடிப்படையாகக் கொண்டதுதான். நான் கதையை முடித்ததும், இந்தி குழுவினருடன் பகிர்ந்துக் கொள்வேன். அவர்கள் அதை அவர்களுடைய சூழல், கலாச்சார மாற்றங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்வார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
முந்தைய 2 பாகங்களுமே ஜீத்து ஜோசப் கதை, திரைக்கதையில் உருவானவைதான். 3-ம் பாகம் மட்டுமே குழப்பம் ஏற்பட்டது. தற்போது ஜீத்து ஜோசப் அளித்துள்ள பேட்டியின் மூலம் அந்தக் குழப்பத்துக்கு தீர்வு எட்டப்பட்டு இருக்கிறது. மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ‘த்ரிஷ்யம் 3’ உருவாக இருப்பதையும் ஜீத்து ஜோசப் அளித்துள்ள பேட்டியில் உறுதிப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.