ராமேசுவரம் கடல் பகுதியில் கணவாய் மீன்கள் அதிகளவு கிடைப்பதால், மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ராமேசுவரம் கடல் பகுதியில் 600-க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். தற்போது, கணவாய் மீன் சீசன் தொடங்கியுள்ளதால், அதிக அளவில் அந்த மீன்கள் கிடைக்கின்றன.
இதுகுறித்து ராமேசுவரம் மீனவர்கள் கூறியது: “மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைந்ததை அடுத்து, ராமேசுவரம் பகுதி மீனவர்கள் கடந்த ஒரு வாரமாக கடலுக்குச் சென்று வருகிறோம். தற்போது, கணவாய் மீன் சீசன் தொடங்கி உள்ளது. ராமேசுவரம் கடல் பகுதியில் டுயூப் கணவாய், ராக்கெட் கணவாய், ஊசி கணவாய், ஒட்டு கணவாய், பேய்க்கடம்பான், சாக்குச்சுருளி, சிலந்தி மீன், நீராளி ஆகிய வகை கணவாய் மீன்கள் கிடைக்கின்றன.
கணவாய் மீன்கள் வலைகளில் எளிதில் சிக்காது. எனவே, இதற்காக பிரத்தியேக வலைகள் பயன்படுத்தப்படுகின்றன. கணவாய் மீனின் தரத்துக்கு ஏற்ப கிலோ ரூ.300 வரையிலும் வியாபாரிகளால் வாங்கப்பட்டு, வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கு பதப்படுத்தப்பட்டு அனுப்பப்படுகிறது” என்று மீனவர்கள் கூறினர்.