‘ரெட்ரோ’ படம் வெளியாகி 50 நாட்கள் கடந்ததை முன்னிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான படம் ‘ரெட்ரோ’. மே 1-ம் தேதி வெளியான இப்படம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை. தற்போது இப்படம் வெளியாகி 50 நாட்கள் ஆனதை முன்னிட்டு கார்த்திக் சுப்பராஜ் பகிர்ந்த பதிவில், “‘ரெட்ரோ’ வெளியாகி 50 நாட்கள் ஆகிவிட்டது. எனக்கு தனிப்பட்ட முறையில் ஒரு சிறப்பான பயணமாகவும், படமாகவும் இருந்தது.
இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான பிறகு ஒரு யுத்தத்தை சந்தித்தது. அதன் மீது வைக்கப்பட்ட வெறுப்புகளை கடந்து, அனைவருடைய அன்பினால் அந்த யுத்தத்தை வெல்ல முடிந்தது. அதற்கு நீங்கள் எங்கள் மீது வைத்த அன்பு மிகுதியாக இருந்தது.
அதேபோல் படத்தின் மீது வைக்கப்பட்ட உண்மையான ஆக்கபூர்வமான விமர்சனங்கள் மற்றும் கருத்துகளுக்கு நன்றி. நிச்சயமாக அனைத்தையும் எடுத்துக் கொண்டு எனது எதிர்கால படைப்புகளில் சரி செய்துகொள்வேன். ‘ரெட்ரோ’ படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் இது ஒரு ஸ்பெஷலான படம். பார்வையாளர்கள் அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார் கார்த்திக் சுப்பராஜ்.