புதுடெல்லி: பாஸ்டேக்கில் புதிதாக ஆண்டு கட்டண முறை நடைமுறைக்கு வரவுள்ளது. இதன் மூலம், தனியார் வாகனங்கள் ரூ.3,000 செலுத்தி ஆண்டுக்கு 200 முறை சுங்கச் சாவடிகளை கடந்து செல்லலாம். வரும் ஆகஸ்ட் 15 முதல் இந்த புதிய முறை அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி இன்று தனியார் வாகனங்களுக்கான பாஸ்டேக் (FASTag) அடிப்படையிலான வருடாந்திர பாஸ் அறிமுகப்படுத்தப்படுவதாக அறிவித்தார். ரூ.3,000-க்கு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வருடாந்திர பாஸ், கார்கள், ஜீப்புகள் மற்றும் வேன்கள் போன்ற வணிக சாராத வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த பாஸ் நடைமுறைக்கு வரும் நாளிலிருந்து ஒரு வருடம் அல்லது 200 பயணங்களுக்கு, எது முன்னதாக வருகிறதோ அதுவரை செல்லுபடியாகும்.
“தொந்தரவு இல்லாத நெடுஞ்சாலை பயணத்தை நோக்கிய ஒரு மாற்றத்துக்கான படியாக, ஆகஸ்ட் 15 முதல் ரூ.3,000 விலையில் பாஸ்டேக் அடிப்படையிலான வருடாந்திர பாஸை அறிமுகப்படுத்துகிறோம். இந்த பாஸ் நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் தடையற்ற மற்றும் செலவு குறைந்த பயணத்தை செயல்படுத்தும் நோக்கம் கொண்டது” என்று நிதின் கட்கரி தனது எக்ஸ் பதிவில் கூறினார். இந்த முறை மூலமாக கிடைக்கும் முக்கிய பயன்கள்:
- காலம்: ஒரு வருடம் அல்லது 200 பயணங்களுக்கு ரூ.3,000 மட்டும் கட்டணம்.
- பயன்: அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் செல்லுபடியாகும்.
- தகுதி: வணிக நோக்கமற்ற தனியார் வாகனங்களுக்கு மட்டுமே.
- பயன்பாட்டின் எளிமை: ஒரே ப்ரீபெய்ட் பரிவர்த்தனை மூலம் சுங்கக் கட்டணங்களை செலுத்த உதவுகிறது.
- நோக்கம்: சுங்கச்சாவடிகளில் காத்திருப்பு நேரங்களையும் நெரிசலையும் குறைத்தல்.
- இந்த வருடாந்திர பாஸ் 60 கிலோமீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளுக்கு அருகில் வசிக்கும் பயணிகளுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.