சேலம்: நடப்பு டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் பந்தை சேதப்படுத்தியதாக திண்டுக்கல் டிராகன்ஸ் அணி மற்றும் அந்த அணியின் கேப்டன் அஸ்வின் மீது குற்றச்சாட்டை வைத்துள்ளது மதுரை பேந்தர்ஸ் அணி. அதற்கான ஆதாரத்தை கொடுக்குமாறு டிஎன்பிஎல் நிர்வாகம் கேட்டுள்ளது.
கடந்த 14-ம் தேதி திண்டுக்கல் மற்றும் மதுரை அணிகள் சேலத்தில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் லீக் சுற்று ஆட்டத்தில் விளையாடின. இதில் 9 விக்கெட்டுகளில் எளிய வெற்றி பெற்றது நடப்பு டிஎன்பிஎல் சாம்பியனான மதுரை அணி. இலக்கை 12.3 ஓவர்களில் அந்த அணி எட்டிய அசத்தியது.
இந்நிலையில், இந்த ஆட்டத்தின் போது திண்டுக்கல் அணி வீரர்கள் பயன்படுத்திய கைக்குட்டையில் (சிறிய டவல்) ரசாயனம் இருந்ததாகவும். அதை கொண்டு பந்தை சேதப்படுத்தியதாகவும் மதுரை அணி குற்றச்சாட்டு வைத்துள்ளது. இது குறித்து விசாரிக்க வேண்டும் என அந்த அணி, டிஎன்பிஎல் நிர்வாகத்திடம் வலியுறுத்தி உள்ளது.
இந்நிலையில், இது முற்றிலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்றும், பந்தை சேதப்படுத்தியதற்கான ஆதாரம் இருந்தால் வழங்குமாறு டிஎன்பிஎல் நிர்வாகம் கூறியுள்ளது. மேலும், ஆட்டம் முழுவதும் பந்தின் தன்மையை கள நடுவர்கள் கண்காணிப்பதாகவும் டிஎன்பிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.