இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வரும் 20-ம் தேதி லீட்ஸில் தொடங்குகிறது. இதில் இந்திய அணியின் ஆடும் லெவனில் இடம் பெறப்போவது நிதிஷ் குமாரா அல்லது ஷர்துல் தாக்கூரா என்ற புதிய சிக்கல் எழுந்துள்ளது.
ஆஸ்திரேலியா தொடரில் 5 டெஸ்ட் போட்டிகளிலுமே ஆடிய நிதிஷ் குமார் ரெட்டி, அங்கு கலக்கு கலக்கென்று கலக்கினார். ஆனால், பவுலிங்கில் அவருக்கு அங்கு சரியான சான்ஸ் கிடைக்கவில்லை. இருந்தாலும் இடையில் சில ஓவர்களை வீசினார். முக்கிய விக்கெட்டுகள் ஒன்றிரண்டை வீழ்த்தினார்.
ஆனால், இங்கிலாந்து பிட்ச், நிலைமைகள் ஆஸ்திரேலியா போல் அல்ல. இங்கிலாந்தில் பந்துகள் குறிப்பாக டியூக் பந்துகள் மேகமூட்டமான வானிலையில் நன்றாக ஸ்விங் ஆகும் தன்மை கொண்டது. இங்கு நிதிஷ் குமாரின் பேட்டிங் நல்ல தடுப்பாட்ட உத்தி இருந்தால்தான் எடுபடும். ஆஸ்திரேலியாவில் பந்துகள் பேட்டிற்கு நன்றாக வரும் ஸ்ட்ரோக் ப்ளே சாத்தியம். ஆனால், இங்கிலாந்தில் கொஞ்சம் பொறுமையுடன் கூடிய தடுப்பாட்டத்திற்குப் பிறகே அவர் பாணி ஆக்ரோஷ பேட்டிங் சாத்தியம்.
மேலும், நிதிஷ் குமார் ரெட்டி பேட்டிங் ஆல்ரவுண்டர் தான். ஆனால், ஷர்துல் தாக்கூர் பவுலிங் ஆல்ரவுண்டர். கடந்த இங்கிலாந்து தொடரில் ஷர்துல் தாக்கூரும் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பை பவுலிங்கில் செய்தார் என்று கூற முடியாது. ஆனால், அனுபவ மட்டத்தில் ஷர்துல் ஆடிய மொத்த 11 டெஸ்ட் போட்டிகளில் 4 ஆட்டங்கள் இங்கிலாந்தில் ஆடியுள்ளார். இதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியும் அடங்கும்.
ஒரு பவுலிங் ஆல்ரவுண்டராக ஷர்துல் தாக்கூர் திருப்திகரமான பங்களிப்பைச் செய்யக்கூடியவர். அவரது இங்கிலாந்தின் சிறு அனுபவம் ஷர்துல் தாக்கூர்தான் அங்கு ஆட வேண்டியவர் என்று பயிற்சியாளர் கவுதம் கம்பீரையும் கேப்டன் ஷுப்மன் கில்லையும் சிந்திக்க வைக்கலாம்.
மாறாக நிதிஷ் குமார் ரெட்டி சமீபத்தில் முடிவடைந்த இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான வார்ம் அப் போட்டிகளில் பந்து வீச்சில் சோபிக்கவில்லை. லயன்ஸ் பேட்டர்கள் அவர் பவுலிங்கை எளிதாக ஆடி ரன்களைச் சேர்த்ததைப் பார்க்க முடிந்தது. இவரது பந்துகளில் வேகமும் அவ்வளவாக இல்லை. 70 மைல்கள் வேகம் தான் வீசுகிறார்.
பேட்டிங்கிலும் வார்ம் அப் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் பவுல்டு ஆனார். இதில் டாம் ஹெய்ன்ஸ் என்ற பகுதி நேர வீச்சாளரிடம் பவுல்டு ஆனதும் நிதிஷ் குமார் ரெட்டியின் பேட்டிங் மீது அணி நிர்வாகத்திற்கு திருப்தி வந்திருக்காது என்றே நம்மை சிந்திக்க வைக்கிறது.
கடந்த ஆட்டங்களைப் பார்க்கும் போது ஷர்துல் தாக்கூரும் இன்னும் மேம்பட வேண்டியுள்ளது என்பதும் உண்மையே. ஆனால், இவர் பக்கம் அனுபவம் உள்ளது. தென் ஆப்பிரிக்காவில் 7 விக்கெட்டுகளை கிட்டத்தட்ட இதே போன்ற கண்டிஷனில் எடுத்ததும் ஷர்துல் பக்கம் சாதகங்களை கூட்டுகிறது.
ஒரு 5-வது பவுலராக ஒருவரிடம் எதிர்பார்ப்பது டைட் ஆக வீசி ரன்களைக் கட்டுப்படுத்துவது மற்றும் பேட்டிங்கில் இறங்கி பயனுள்ள வகையில் ரன்களை எடுப்பது என்பதே. இதில் இப்போதைக்கு ஷர்துல் தாக்கூர்தான் முன்னிலையில் இருப்பதாக வல்லுநர்கள் பார்க்கின்றனர்.