சென்னை: அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் (ஏஐஎப்எப்) ஆதரவுடன் மாநில அளவிலான ஜூனியர் ஆடவர், மகளிர் கால்பந்துப் போட்டிகள் வரும் ஜூன் 20-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெறவுள்ளன.
இதுதொடர்பாக தமிழ்நாடு கால்பந்து சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தேசிய அளவிலான ஜூனியர் ஆடவர், மகளிர் கால்பந்துப் போட்டி ஜூலை 10-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெற உள்ளன.
இந்தப் போட்டிக்கு செல்லும் தமிழக அணியைத் தேர்வு செய்வதற்காக தற்போது மாநில ஜூனியர் ஆடவர், மகளிர் கால்பந்து போட்டிகளை தமிழக கால்பந்து சங்கம் நடத்த உள்ளது.
இதற்காக ஆடவர் ஜூனியர் போட்டிகள் ஜூன் 26 முதல் 29-ம் தேதி வரை சாத்தூர் எஸ்.எச்.என். எட்வர்ட் பள்ளி ஏ மைதானத்திலும், சாத்தூர் எஸ்ஆர்என்எம் கல்லூரி பி மைதானத்திலும் நடைபெறும்.
இதேபோல் ஜூனியர் மகளிர் கால்பந்துப் போட்டிகள் திண்டுக்கல் எஸ்டிஏடி ஏ மைதானத்திலும், திண்டுக்கல் செயின்ட் ஜோசப் பாலிடெக்னிக் கல்லூரி பி மைதானத்திலும் ஜூன் 20-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெறும்.
இந்த போட்டியில் பங்கேற்கும் மாவட்ட அணிகள் தங்களது அணி விவரங்களை உடனடியாக அனுப்ப வேண்டும்.
போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் தங்களது அசல் பிறந்தநாள் சான்றிதழ், அசல் ஆதார் அட்டை ஆகியவற்றைக் கொண்டு வரவேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.