புதுடெல்லி: இந்திய அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 20-ம் தேதி ஹெட்டிங்லியில் தொடங்கவுள்ளது.
இதுகுறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியதாவது: தற்போது இங்கிலாந்து சென்றுள்ள அணியில் அனுபவம் மிகுந்த வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் இல்லை. அவர்கள் ஓய்வு பெற்றுவிட்டனர். அணியில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான வீரர்கள் குறைந்த அளவு டெஸ்ட் போட்டியில் விளையாடியவர்களாகவே உள்ளனர்.
அதே நேரத்தில் பந்துவீச்சில் எதிரணியை நிலைகுலையச் செய்யும் வீரர் ஜஸ்பிரீத் பும்ரா இருக்கிறார். அவர் அங்கே எப்படி செயல்படப் போகிறார் என்பதைப் பார்க்க வேண்டும்.
அணியில் இளம் வீரர்கள் அடங்கியிருக்கின்றனர். எனவே, இங்கிலாந்துக்கு இந்திய அணி நிச்சயம் சவால் அளிக்கும்.
சாய் சுதர்ஷன், நிதிஷ் குமார் ரெட்டி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, சிராஜ், ஆகாஷ் தீப் ஆகியோர் சிறப்பாக செயல்படுவர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.