‘மார்கோ 2’ திட்டம் கைவிடப்பட்டதாக உன்னி முகுந்தன் தெரிவித்துள்ளார்.
மலையாளம் மட்டுமன்றி இந்தியளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘மார்கோ’. இந்த வெற்றியை முன்வைத்து 2-ம் பாகமும் அறிவிக்கப்பட்டது. ஆனால் யார் இயக்குநர் உள்ளிட்ட எந்தவொரு விவரமும் வெளியிடப்படாமல் இருந்தது. இதனிடையே, இப்படம் கைவிடப்பட்டதாக உன்னி முகுந்தன் அறிவித்துள்ளார்.
ரசிகர் ஒருவர் ‘மார்கோ 2’ அப்டேட் குறித்து உன்னி முகுந்தனிடம் கேள்வி எழுப்பினார். அவருக்கு பதிலளிக்கும் விதமாக உன்னி முகுந்தன், “மன்னிக்கவும். ‘மார்கோ’ படங்களைத் தொடரும் திட்டத்தினை கைவிட்டுவிட்டேன். ஏனென்றால் அப்படத்தினைச் சுற்றி அதிகப்படியான விமர்சனங்கள் இருக்கின்றன. ஆகையால் ‘மார்கோ’ படத்தை விட பெரிய மற்றும் சிறந்த படமொன்றை கொண்டு வர என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். அனைவருடைய அன்புக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
உன்னி முகுந்தனின் இந்த அறிவிப்பு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. ஹனிஃப் அடினி இயக்கத்தில் உன்னி முகுந்த நடிப்பில் வெளியான படம் ‘மார்கோ’. ‘ஏ’ சான்றிதழ் பெற்றிருந்தாலும் ரூ.30 கோடியில் தயாரிக்கப்பட்டு ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மாபெரும் வெற்றியைப் பெற்றது.