பாமகவின் நிர்வாகிகளுடன் 2-வது நாளாக ஆலோசனை நடத்திய அக்கட்சியின் தலைவர் அன்புமணி, ‘தமிழகத்தை பாமக ஆளும் நேரம் வந்துவிட்டது’ என தெரிவித்தார்.
சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 2-வது நாளாக பாமக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மற்றும் உறுப்பினர் அடையாள அட்டை, உறுப்பினர் படிவம் வழங்கும் நிகழ்ச்சி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நேற்று நடைபெற்றது.
ஜி.கே.மணி, இரா.அருள் பங்கேற்கவில்லை: காலையில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கள்ளக்குறிச்சி மற்றும் மாலையில் அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், திருச்சி மாவட்ட அனைத்து நிலை நிர்வாகிகளுடனும் ஆலோசனை மேற்கொண்டார்.
இக்கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி கூட்டத்தில் பங்கேற்கவில்லை. சேலம் மேற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இரா.அருள் உடல்நலக் குறைவால் பங்கேற்கவில்லை என தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் அன்புமணி பேசியதாவது: ஒரு முக்கியமான வேலை திட்டத்துக்காக நாம் இங்கு கூடியிருக்கிறோம். நம் கட்சியை பலப்படுத்தவும், வலுப்படுத்தவும் புதிய உறுப்பினர்களை கட்சியில் சேர்க்க வேண்டும்.
ராமதாஸ் குலசாமி: பாமக நிறுவனர் ராமதாஸ் நம்முடைய குலசாமி, குலதெய்வம். அவர் ஒரு கொள்கை வழிகாட்டி. இந்த கட்சியை அவர்தான் தொடங்கியிருக்கிறார். அவருடைய 45 ஆண்டுகால உழைப்பு, தொலைநோக்கு சிந்தனை, சமூக நீதி உட்பட அனைத்தும், அவர் நமக்கு கற்றுக்கொடுத்தது. அவருடைய கொள்கைகள் அனைத்தையும் நாம் கடைபிடித்து, முன்னேறுவோம். வெற்றி பெறுவோம். அதில் மாற்றுக்கருத்து கிடையாது.
தமிழகத்தை இத்தனை காலமாக யார் யாரோ ஆண்டார்கள். இனி நம்முடைய காலம். அது நெருங்கி கொண்டிருக்கிறது. அதற்காகத்தான் இதுபோன்ற நடவடிக்கைகளின் மூலம், நமது கட்சியின் வளர்ச்சிக்கான செயலாக செய்து வருகிறோம்.
புதிய உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும். உறுப்பினர் அட்டையைப் புதுப்பிக்க வேண்டும். கிளை நிர்வாகிகளை நியமிக்க வேண்டும். வாக்குச்சாவடி முகவர்களை நியமிக்க வேண்டும். இந்த வேலைகளை 3 வாரங்களில் முடிக்க வேண்டும்.
கட்சி பொறுப்பாளர்கள் உங்களுடைய பொறுப்புகளை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். ‘தமிழக மக்களின் உரிமை மீட்பு பயணம்’ என்ற பெயரில், நான் நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறேன். விரைவில் அந்த பயணம் குறித்து அறிவிப்பேன். எனவே, அடுத்தடுத்து நாம் பல வேலைத்திட்டங்களை செயல்படுத்த இருக்கிறோம்.
கட்சியில் சின்னச் சின்ன குழப்பங்கள் வருகின்றன. அதையெல்லாம் சரிபடுத்திவிடுவேன். பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டு, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டு, உங்களால் தேர்வு செய்யப்பட்ட தலைவன் நான். நம் லட்சியம், கனவு, பாமக தமிழகத்தை ஆள வேண்டும். அதற்கான நேரம் வந்திருக்கிறது. நிச்சயமாக நடக்கும். அடுத்த கட்டத்துக்கு நாம் செல்ல வேண்டும். மனு கொடுக்கும் கட்சி என்ற நிலையில் இருந்து, மனு வாங்கும் கட்சி என்ற நிலைக்கு வர வேண்டும்.
இன்னும் 8 – 10 மாதத்தில் தேர்தல் வருகிறது. நிச்சயமாக மிகப்பெரிய வெற்றியை இந்த தேர்தலில் நாம் பெறுவோம். அதற்கான வியூகங்களை அமைத்து வருகிறோம். அவரா? இவரா? என்ற எண்ணம் எல்லாம் வேண்டாம். நம்முடைய இயக்கம் ஒரே இயக்கம்தான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.