சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் போலீஸார் பாகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், முதல்வர் கொடி ஏற்ற உள்ள கோட்டையைச் சுற்றி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சுதந்திர தின விழா நாளை மறுநாள் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சுதந்திர தினவிழா உரை நிகழ்த்த உள்ளார். இதையடுத்து, சுதந்திர தினவிழா நடைபெறும் புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும், சென்னையில் காவல் ஆணையர் அருண் உத்தரவின்பேரில் கூடுதல் காவல் ஆணையர்கள் கண்ணன் (தெற்கு), கார்த்திகேயன் (போக்குவரத்து), பிரவேஷ் குமார் (வடக்கு) மேற்பார்வையில், 9,100 போலீஸார் மூலம் சிறப்பு பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட சென்னை விமான நிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்கள், பேருந்து, மெட்ரோ நிலையங்கள், வணிக வளாகங்கள், கடற்கரை பகுதிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் இதர முக்கிய பிரமுகர்கள் செல்லும் இடங்களில் கூடுதல் போலீஸார் தீவிர சோதனைகள் மற்றும் கண்காணிப்புப் பணிகளுக்கு முடுக்கி விடப்பட்டுள்ளது.
இது தவிர சென்னையிலுள்ள அனைத்து தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சந்தேக நபர்களின் நடமாட்டம், கேட்பாரற்ற வாகனங்கள் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால் காவல் துறைக்கு தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சென்னை பெருநகர் முழுவதும் அந்தந்த காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நான்கு சக்கர மற்றும் இருசக்கர ரோந்து வாகனங்கள் மூலம் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, முக்கியமான இடங்களில் தடுப்புகள் அமைத்து காவல் துறையினர் மூலம் தீவிர வாகனத் தணிக்கைகள், முக்கிய இடங்களில் காவல் துறையினர் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டும், பாதுகாப்புப் பணிகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. இதேபோல், தமிழகம் முழுவதும் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் சுமார் ஒரு லட்சம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.