மேட்டூர்: தமிழகத்தில் மின் தேவை அதிகரித்ததன் காரணமாக, மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்த 3 அலகுகளில், 12 நாட்களுக்கு பின்னர் இன்று மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேட்டூர், சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் அனல் மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. கோடை காலத்தில் மின்சார தேவை அதிகரிக்கும்போது, அனல் மின் நிலையங்கள், முழு திறனுடன் மின் உற்பத்தியில் ஈடுபடுத்தப்படும். இந்நிலையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கோடை மழை மற்றும், காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்ததன் காரணமாக மின் பயன்பாடு குறைந்து காணப்பட்டது.
இதன் காரணமாக, அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, மேட்டூர் அனல் மின் நிலையத்தின் 2 பிரிவுகளில் 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். அதில் 820 மெகா வாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. குறிப்பாக, 600 மெகா வாட் உற்பத்தி பிரிவு முழுமையாக செயல்பட்டு வந்தது. தலா 120 மெகா வாட் உற்பத்தித் திறன் கொண்ட 4 பிரிவில் 1 மட்டுமே இயங்கி வந்தது. இந்நிலையில், 12 நாட்களாக 3 பிரிவுகளில் மின் உற்பத்தி நடக்கவில்லை. தற்போது, நிறுத்தப்பட்டிருந்த 3 பிரிவுகளிலும் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அனல்மின் நிலைய அதிகாரிகள் கூறியதாவது, ”தமிழகத்தில் கோடை மழையின் தாக்கத்தால் பல மாவட்டங்களில் கனமழை கொட்டியது. இதனால், வெயிலின் தாக்கம் குறைந்தததால் வீடுகள், அலுவலகங்களுக்கான மின்சார பயன்பாடும் சற்று குறைந்தது. கோடை மழையால் காற்றின் வேகம் அதிகரித்ததன் காரணமாக காற்றாலையில் மின்னுற்பத்தி அதிகரித்து இருந்தது. இதன் காரணமாக அனல் மின் நிலையங்களில் மின்னுற்பத்தி குறைக்கப்பட்டது.
தற்போது, வெயில் தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கிய நிலையில் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. மேட்டூர் அனல் மின் நிலையத்தின் முதல் பிரிவில் உள்ள தலா 210 மெகாவாட் கொண்ட 4 அலகுகள், 600 மெகாவாட் கொண்ட 2-வது பிரிவு என அனைத்திலும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.” என்றனர்.