நாமக்கல்: அர்ச்சகர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் அர்த்த மண்டபத்தில் நேற்று சிசிடிவி கேமராவை இந்து சமய அறநிலையத் துறையினர் பொருத்தினர். திருச்செங்கோட்டில் பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயில் அமைந்துள்ளது. பல்வேறு சிறப்புகள் பொருந்திய கோயிலின் அர்த்த மண்டபத்தில் சிசிடிவி கேமரா பொருத்த இந்து சமய அறநிலையத் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதற்கு கோயில் அர்ச்சகர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், கடந்த ஜூன் மாதம் அர்த்த மண்டபத்தில் சிசிடிவி கேமரா பொருத்த எதிர்ப்பு தெரிவித்து பதாகைகள் ஏந்தி கோயிலைச் சுற்றி வந்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இச்சூழலில் நேற்று இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையரும், கோயில் செயல் அலுவலருமான ரமணிகாந்தன் தலைமையிலான அதிகாரிகள் காவல் துறை யினர் பாதுகாப்புடன் அர்த்த மண்டபத்தில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கு அர்ச்சகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அர்ச்சகர்களை வெளியேற்றிய அதிகாரிகள் அர்த்த மண்டபத்தில் சிசிடிவி கேமராவை பொருத்தினர். எனினும், அதை அகற்ற வேண்டும் என அர்ச்சகர்கள் தொடர்ந்து வலியுறுத்தியதால் கோயில் வளாகத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இதுகுறித்து ஆதி சைவ அர்ச்சகர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோயிலை பொறுத்தவரை ஸ்தானீக பரம்பரையைச் சேர்ந்தவர்கள் பரம்பரையாக பூஜைகளை செய்து வருகிறோம். இதுவரை இல்லாத வகையில் ஒரு மனுதாரர் கேட்டுக் கொண்டதையடுத்து கோயில் கருவறையில் உள்ள மரகத லிங்கத்தை பாதுகாப்பதாகக் கூறி அர்த்த மண்டபத்தில் ஆகம விதிகளுக்கு முரணாக சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
கருவறையில் உள்ள சுவாமியை படம் பிடிக்கும் வகையில் இது பொருத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள முக்கியமான கோயில்களில் கூட மகா மண்டபம், அர்த்தமண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் ஆகம விதிகளுக்கு உட்பட்டு மின் விளக்குகள், சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதில்லை, பொருத்தப்படவும் இல்லை.
ஆனால் திருச்செங்கோடு மலைக் கோயிலில் மட்டும் ஆகம விதிகளை மீறி அர்த்த மண்டபத்தில் சிசிடிவி கேமராவை இந்து சமய அறநிலையத்துறையினர் பொருத்தியுள்ளனர். இது எங்களையும், பக்தர்களையும் புண்படுத்தும் செயலாகும். அர்த்த மண்டபம், கருவறையை தவிர்த்து எங்கு வேண்டுமானாலும் சிசிடிவி கேமரா பொருத்தலாம். எங்களை வெளியேற்றிவிட்டு சிசிடிவி கேமரா பொருத்தியுள்ளனர். இனி பக்தர்கள் தான் ஆகம விதிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறினர்.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கோயில் ஆகம விதிகளுக்கு முரணாக எந்த செயலும் நடத்தப்படவில்லை. நீதிமன்ற அறிவுறுத்தலின்படி சிசிடிவி கேமரா பொருத்தும் பணி நடைபெறுகிறது. மூலவர் திருவுருவம் தெரியாதபடி சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
மேலும், கருவறையின் வாசல் மட்டுமே வெளியே தெரியும். யார் என்ன எடுத்துச் செல்கிறார்கள், கொண்டு வருகிறார்கள் என்பதை கண்காணிக்கும் வகையில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அர்ச்சகர்களிடம் பேசியபோதும் ஒத்துழைக்க மறுக்கின்றனர், என்றனர்.திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் அர்த்த மண்டபத்தில் காவல் துறையினரின் பாதுகாப்புடன் கேமரா பொருத்தப்பட்டது.