சென்னை: சென்னை மாநகருக்குள் நுழைய கூடாது என பாஜக மாநில பட்டியல் அணி செயலாளர் நெடுங்குன்றம் சூர்யாவுக்கு மாநகர காவல் ஆணையர் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
பாஜக மாநில பட்டியல் அணி செயலாளர் நெடுங்குன்றம் சூர்யா மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறி, அவரை ஏன் சென்னைக்குள் நுழைய தடை விதிக்கக் கூடாது என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என கொளத்தூர் காவல் துணை ஆணையர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இந்த நோட்டீஸுக்கு சூர்யா பதில் அளித்திருந்த நிலையில், அவரை ஏப்ரல் 25-ஆம் தேதி முதல் ஓர் ஆண்டுக்கு சென்னை மாநகருக்குள் நுழைய கூடாது என காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து நெடுங்குன்றம் சூர்யா சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறையின் நோட்டீசுக்கு உரிய விளக்கம் அளித்தும் கூட அதை பரிசீலிக்காமல் காவல் ஆணையர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும், எந்த ஒரு காரணத்தையும் குறிப்பிடாமல் தன்னை சென்னைக்குள் நுழைய கூடாது என பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என நெடுங்குன்றம் சூர்யா தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வாதத்தை ஏற்ற நீதிபதி, காவல் ஆணையரின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.