சென்னை: ஜப்பானிய மூளைக் காய்ச்சல் தடுப்பூசி திட்டம் 7 மாவட்டங்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 27.63 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் விருதுநகர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருச்சி, திருவாரூர், மதுரை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், புதுக்கோட்டை, கரூர் மாவட்டங்களிலும், சென்னையில் 2 மண்டலங்களிலும் மூளைக் காய்ச்சல் தடுப்பூசி திட்டம் கடந்த 2007-ம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ளது.
இந்நிலையில், சென்னையில் இதர 13 மண்டலங்களிலும், புதிதாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருநெல்வேலி, தென்காசி, நாகப்பட்டினம், வேலூர் என மொத்தம் 7 மாவட்டங்களுக்கு இந்த திட்டம் தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த விரிவாக்கத் திட்டத்தை சென்னை ஷெனாய் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்.
அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நாடு தழுவிய தடுப்பூசி திட்டத்தில், 12 வகையான நோய் பாதிப்புகளை தடுப்பதற்கு 11 வகையான தடுப்பூசிகள் தமிழகத்தில் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது. அதில், மூளைக் காய்ச்சல் எனப்படும் ஜப்பானிய மூளைக் காய்ச்சல் சில வகையான கியூலெக்ஸ் கொசுக்களால் பரவும் ஒரு வைரஸ் நோய்.
இது மத்தியநரம்பு மண்டலத்தை பாதித்து, கடுமையான சிக்கல்கள், வலி பாதிப்புகள், சில நேரங்களில் உயிரிழப்பையும் ஏற்படுத்துகிறது. இதில் உயிர் பிழைத்தவர்கள்கூட அதிக அளவில் நரம்பியல் விளைவுகளால் பாதிக்கப்படுகின்றனர்.
இயற்கை தொற்று காரணமாக எதிர்ப்பு சக்தி இல்லாத குழந்தைகளை கண்டறிந்து, அவர்கள் அதிகம் உள்ள மாவட்டங்களில் இந்த தடுப்பூசி போடப்படுகிறது. தற்போது தொடங்கப்பட்டுள்ள விரிவாக்கத் திட்டத்தில் 27.63 லட்சம் குழந்தைகளுக்கு மூளைக் காய்ச்சல் தடுப்பூசி ஒரு டோஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
5-15 வயது குழந்தைகளுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் (ஆக.13 முதல் செப். 12 வரை), 1-5 வயது குழந்தைகள், பள்ளியில் இருந்து இடைநிற்றலான குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையங்களிலும் (செப்.13 முதல் அக்.12 வரை), 1-15 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கு ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம், சிறுவர் சீர்திருத்த பள்ளிகளிலும் (அக்.13 முதல் நவ.12 வரை) திங்கள், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் அதிகபட்சம் 12 நாட்கள் நடைபெறும் முகாம்களில் இலவசமாக தடுப்பூசி போடப்படும். விடுபட்ட குழந்தைகளுக்கு தனியாக ஒரு வாரம் தடுப்பூசி போடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். சுகாதாரத் துறை செயலர் செந்தில்குமார், பொது சுகாதாரம், நோய்த் தடுப்பு மருந்து துறை இயக்குநர் சோமசுந்தரம், மருத்துவம், ஊரக நலப் பணிகள் இயக்குநர் சித்ரா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.