சென்னை: கதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். முதல்வர் கொடியேற்றும் புனித ஜார்ஜ் கோட்டையைச் சுற்றிலும் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் சுதந்திர தின விழா நாளை (ஆக. 15) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியேற்றிவைத்து, சுதந்திர தினவிழா உரையாற்றுகிறார். இதையடுத்து, புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் காவல் ஆணையர் அருண் உத்தரவின்பேரில், கூடுதல் ஆணையர்கள் கண்ணன் (தெற்கு). கார்த்திகேயன் (போக்குவரத்து). பிரவேஷ் குமார் (வடக்கு) மேற்பார்வையில் 9,100 போலீஸார் மூலம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலையம், ரயில் நிலையங்கள். பேருந்து முனையங்கள். பேருந்து மற்றும் மெட்ரோ நிலையங்கள். வணிக வளாகங்கள், கடற்கரைப் பகுதிகள். வழிபாட்டுத் தலங்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் செல்லும் இடங்களில் கூடுதல் போலீஸார் நியமிக்கப்பட்டு, கண்காணிப்பு மற்றும் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், சென்னையில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சந்தேக நபர்களின் நடமாட்டம் இருந்தால் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சென்னை முழுவதும் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, முக்கிய இடங்களில் தடுப்புகள் அமைத்து காவல் துறையினர் வாகன தணிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இதேபோல, தமிழகம் முழுவதும் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் சுமார் ஒரு லட்சம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ரயில் நிலையங்களில்…. சென்னை. திருச்சி ஆகிய 2 ரயில்வே காவல் மாவட்டங்களிலும் உள்ள ரயில் நிலையங்களில் 1,300 ரயில்வே போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுடன் ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்களும் (ஆர்பிஎஃப்) இணைந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை சென்ட்ரல், எழும்பூர். திருவள்ளூர், காட்பாடி, சேலம் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரயில்வே தண்டவாளப் பகுதிகளில் ரோந்துப் பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும், ரயில் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூல மாகவும் போலீஸார் கண்காணித்து வருகின்றனர்.
ஆளுநரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு: தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்ட நிலையில், அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே தொடர்ந்து பனிப்போர் நிலவி வருகிறது. இதனால் ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் தேநீர் விருந்தை புறக்கணித்து வருகின்றன.
கடந்த ஜன. 26-ம் தேதி குடியரசு தினத்தன்று ராஜ்பவனில் நடைபெற்ற தேநீர் விருந்தை திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்தன. இந்நிலையில், சுதந்திர தினத்தையொட்டி நாளை நடைபெறும் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கப் போவதாக திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளன.