ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பாக அனைத்துத் துறை அதிகாரிகளுக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம் ஊட்டியில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா முன்னிலை வகித்தார். மாநில தகவல் ஆணையர்கள் பிரியகுமார், இளம்பரிதி, நடேசன் தலைமை வகித்தனர்.
முகாமில் தமிழ்நாடு தகவல் அறியும் உரிமை சட்ட தகவல் ஆணையர் பிரியகுமார் பேசியதாவது: தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து பொதுமக்களிடையே அதிக அளவில் விழிப்புணர்வு உள்ளது. முன்பு குறைவான அளவு மனுக்கள் மட்டுமே இச்சட்டத்தின் கீழ் பெறப்பட்டன. தற்போது பல்வேறு துறைகளிலிருந்து அதிக அளவில் மனுக்கள் பெறப்படுகி்ன்றன.
மனுதாரர்களிடம் இருந்து வரும் மனுக்கள் மீது உடனடியாக விசாரணை மேற்கொள்ளுமாறு பொது தகவல் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட காலத்துக்குள் மனுக்கள் மீது பதில் அளிக்காத பொது தகவல் அதிகாரிகள் மீது நடடிக்கை மேற்கொள்ளவும், சட்டத்தில் வழிவகை உள்ளது.
எனவே மனுதாரர் அளிக்கும் மனுவை நன்றாக படித்து சரியான பதிலை மனுதாரருக்கு 30 நாட்களுக்குள் தர வேண்டும். நீங்கள் அளிக்கும் பதில்கள் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.