விண்வெளியில் இருந்து நேரலையில் பேசிய இந்திய விண்வெளி வீரர் ஷுபன்ஷு சுக்லா, பூஜ்ஜிய புவிஈர்ப்பு விசைக்கு தன்னை பழக்கிக் கொள்வதில் குழந்தைபோல் உணர்வதாக நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்த ஷுபன்ஷு சுக்லாவுடன், நாசாவின் கென்னடி விண்வெளி மைய ஏவுதளத்திலிருந்து ஃபால்கன்-9 ஏவூர்தி (ராக்கெட்) விண்வெளி நோக்கி ஜூன் 25 (நேற்று) சீறிப்பாய்ந்தது. நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியக் குடிமகன் ஒருவர் விண்வெளிப் பயணம் மேற்கொண்டதால் அந்தப் பயணம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
இந்நிலையில், ஷுபன்ஷு விண்வெளியில் டிராகன் விண்கலத்தில் இருந்து நேரலையில் பேசியுள்ளார். அப்போது அவர், “நமஸ்கார். (வணக்கம்) நான் இங்கே பூஜ்ஜிய புவிஈர்ப்பு விசைக்கு என்னை பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறேன். ஒரு குழந்தைபோல் நடைபயின்று கொண்டிருக்கிறேன். என்னை நானே எப்படி கட்டுப்பாட்டில் வைப்பது என்பதை கற்றுக் கொண்டிருக்கிறேன். இங்கு ஒவ்வொரு தருணத்தையும் நான் மகிழ்ச்சியுடன் ரசிக்கிறேன். ஆக்சியம் 4 திட்டம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப விழையும் இந்தியாவின் விண்வெளித் திட்ட முன்னெடுப்புகளுக்கு ஒரு வலுவான முன்னேற்றம், ககன்யான் திட்டத்துக்கும் ஒரு முன்னேற்றப் பாதைதான்.” என்று கூறியுள்ளார்.