சூரசந்த்பூர்: மணிப்பூரின் சூரசந்த்பூர் மாவட்டத்தில் இன்று (திங்கள்கிழமை) அடையாளம் தெரியாத மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 72 வயது பெண் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.
சூரசந்த்பூர் நகரத்திலிருந்து சுமார் 7 கி.மீ தொலைவில் உள்ள மோங்ஜாங் கிராமத்துக்கு அருகே பிற்பகல் 2 மணியளவில் பாதிக்கப்பட்டவர்கள் காரில் சென்று கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முதற்கட்ட விசாரணையில், அவர்கள் ஒரு குறிப்பிட்ட தூரத்திலிருந்து காரை நோக்கி சுட்டதாக சூரசந்த்பூர் மாவட்ட காவல் துறை அதிகாரி தெரிவித்தார்.
இறந்தவர்கள் தெங்கோதாங் ஹாக்கிப் என்கிற தஹ்பி (48), சீகோகின் (34), லெங்கோஹாவ் (35) மற்றும் பால்ஹிங் (72) என அடையாளம் காணப்பட்டதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. சம்பவ இடத்திலிருந்து 12-க்கும் மேற்பட்ட குண்டுகள் மீட்கப்பட்டன. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இச்சம்பவம் குறித்து விசாரிக்க காவல் துறை மற்றும் கூடுதல் பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதிக்கு விரைந்துள்ளனர். ஏற்கெனவே நடந்த கலவரங்களின் தொடர்ச்சியாக இந்த தாக்குதல் நடந்ததா என்பது குறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மணிப்பூர் கலவர பின்புலம்: மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி இனத்தவருக்கு எஸ்.டி. அந்தஸ்து வழங்குவது குறித்து மத்திய அரசுக்கு மாநில அரசு பரிந்துரை செய்யுமாறு மணிப்பூர் உயர் நீதிமன்றம் 2023-ல் உத்தரவிட்டது. இதற்கு அங்குள்ள பழங்குடியின மாணவர்களும், குகி பழங்குடியினத்தவரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் இரு தரப்பினர் இடையே பயங்கர கலவரம் ஏற்பட்டது. ஏராளமான வீடுகள் எரிக்கப்பட்டன.
இந்த கலவரத்தில் இதுவரை 221 பேர் உயிரிழந்துள்ளனர். 1,108 பேர் காயம் அடைந்தனர். 60 ஆயிரம் பேர் தாங்கள் வசித்த பகுதிகளை விட்டு இடம் பெயர்ந்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக, மணிப்பூர் மாநில முதல்வர் பிரேன் சிங், கடந்த பிப்ரவரியில் தனது பதவியை ராஜினாமா செய்தார். கலவரம் ஏற்பட்டு 2 ஆண்டுகளுக்கு பிறகு, முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்த நிலையில், மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.