புதுடெல்லி: நாட்டின் மன உறுதியைக் குலைக்கவே பிரதமர் இந்திரா காந்தி, அவசரநிலையைப் பிறப்பித்தார் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
அவசரநிலை பிறப்பிக்கப்பட்டதன் 50-ம் ஆண்டை ஒட்டி, பாஜகவின் இளைஞர் அமைப்பான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் உரையாற்றிய எஸ். ஜெய்சங்கர், “1975 ஆம் ஆண்டு அவசரநிலை பிறப்பிக்கப்பட்டபோது, அனைவரும், குறிப்பாக இளைஞர்கள், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்கள். மாணவர்கள் விடுதியில் தூங்கிக் கொண்டிருக்கும்போது, திடீரென்று அவர்களில் சிலர் எந்தக் காரணமும் இல்லாமல் அழைத்துச் செல்லப்பட்டார்கள். இப்படி நடப்பது சாதாரணமானது அல்ல. இது அனைத்தும் நாட்டின் மன உறுதியைக் குறைக்கவே செய்யப்பட்டது.
1975 ஆம் ஆண்டு அவசரநிலை அமல்படுத்தப்பட்டபோது நான் ஒரு மாணவனாக இருந்தேன். என்ன நடந்தது, எல்லோரும் என்ன செய்ய வேண்டியிருந்தது என்பதை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். அவசரநிலையிலிருந்து நான் கற்றுக்கொண்ட பாடம், “சுதந்திரத்தை ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்” என்பதுதான்.
அவசரநிலை அரசியலுடன் தொடர்புடையது என்று எல்லோரும் கருதுகிறார்கள். ஆனால் அது, கலை, கலாச்சாரம், சினிமா, கல்வி உட்பட நாட்டின் ஒவ்வொரு அம்சத்தையும் பாதித்தது. அனைவரின் வாழ்க்கை முறையையும் பாதித்தது.
இந்திய அரசுக்கு உடனடி உள்நாட்டு அச்சுறுத்தல்கள் உள்ளன என்ற காரணத்தின் அடிப்படையில் அவசரநிலை விதிக்கப்பட்டது. சில சிறிய உள்நாட்டு பிரச்சினைகள் நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தல்களாக சித்தரிக்கப்பட்டன. பல முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பதிப்பகங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நாட்டில் பத்திரிகைகள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டன. செய்தித்தாள்கள் அச்சிட அனுமதிக்கப்படவில்லை. பல செய்தித்தாள்கள் தங்கள் சொந்த வழியில் அவசரநிலையை எதிர்த்தன. அவசரநிலை காலத்தில் பல திரைப்படங்கள் நாட்டில் வெளியிட அனுமதிக்கப்படவில்லை.
அவசரநிலையின் போது, இரண்டு ஆண்டுகளில், ஐந்து அரசியலமைப்பு திருத்தங்கள் மற்றும் 48 அவசரச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. ஐந்து சட்டங்களில் மூன்று சட்டங்கள் அவசரநிலை தொடர்பானவை. 30வது திருத்தம் அவசரநிலை பிரகடனத்திற்கு எதிராக மக்கள் நீதிமன்றங்களை அணுக முடியாது என்று கூறியது. 39வது திருத்தம் பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கு எதிராக மக்கள் நீதிமன்றத்தை நாட முடியாது என்று கூறியது. 42வது திருத்தம் மக்களின் அடிப்படை உரிமைகள் நீர்த்துப்போகும் என்றும், நாட்டில் நீதித்துறையின் அதிகாரம் குறைக்கப்படும் என்றும் கூறியது. அவர்கள் இந்திய ஜனநாயகத்தின் இயல்பையே தாக்கினர்.
1980 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, அவசரநிலையை விதித்ததற்காக ஒரு துளி கூட வருத்தம் தெரிவிக்கவில்லை. மக்கள் மீது அவசரநிலையை விதித்ததற்காக காந்தி குடும்பத்தினர் அனைவரும் ஒருபோதும் வருத்தம் தெரிவித்ததில்லை. அவசரநிலை விதிக்கப்பட்டாலும், நாடு முழுவதும் உள்ள இந்தியர்கள் அதை எதிர்த்தனர். இது ஜனநாயகம் இந்தியர்களின் ரத்தத்தில் ஓடுகிறது என்பதை நிரூபிக்கிறது.” என தெரிவித்தார்.