சிம்லா: இந்தியா முழுவதும் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இமாச்சலப் பிரதேசத்தில் பலத்த மழை பெய்துவருகிறது. இமாச்சலில் கடந்த 24 மணி நேரத்தில் மழை பாதிப்புகளில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். மேலும், பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சிம்லாவில் பலத்த மழை பெய்து வருவதால் பட்டாகுஃபாரில் உள்ள ஐந்து மாடி கட்டிடம் இன்று (திங்கள்கிழமை) அதிகாலை இடிந்து விழுந்தது. நேற்று இரவு அந்த குடியிருப்பை காலி செய்ததால் மக்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சிம்லா உட்பட மாநிலத்தின் சில பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்ததால், இந்த அடுக்குமாடி வீட்டை காலி செய்தனர். அருகிலுள்ள நான்கு வழிச் சாலை கட்டுமானப் பணிகள் காரணமாக இந்தக் கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான வீடியோவில், கனமழையால் விரிசல் ஏற்பட்டு முழு கட்டிடமும் சரிந்து விழும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
शिमला : भट्टाकुफर में भारी बारिश के चलते सुबह 5 मंजिला मकान गिरा – बीती रात ही खाली करवाया गया था मकान – फोरलेन निर्माण के चलते मकान में आई थी दरारें।#Shimla #Bhattakufar #MonsoonAlert #DDNewsHimachal pic.twitter.com/4DKWgErN8J
— DD News Himachal (@DDNewsHimachal) June 30, 2025
இமாச்சலில் கடந்த 24 மணி நேரத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் மூன்று பேர் உயிரிழந்தனர். ஜூன் 20 அன்று பருவமழை தொடங்கியதிலிருந்து, மழை பாதிப்புகளால் இமாச்சல் மாநிலத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர், நான்கு பேர் காணாமல் போயுள்ளனர்.
மழை தொடர்பான பாதிப்புகளால் மாநிலம் முழுவதும் 129 சாலைகள் மூடப்பட்டன. சிர்மவுரில் 57 சாலைகள் மற்றும் மண்டியில் உள்ள 44 சாலைகளில் அதிகபட்ச சேதம் ஏற்பட்டது. இந்தப் பகுதிகளில் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டதுடன், 612 மின்மாற்றிகளும் பாதிக்கப்பட்டன.
10 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை: இமாச்சலில் பிலாஸ்பூர், ஹமீர்பூர், காங்க்ரா, குலு, மண்டி, சிம்லா, சோலன், சிர்மவுர், உனா மற்றும் சம்பா உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று (ஜூன் 30) மிதமானது முதல் அதிக திடீர் வெள்ள அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மண்டியில் உள்ள ஜூனி காட் மற்றும் பியாஸ் நதிகளில் நீர்மட்டம் உயர்ந்ததால், மக்கள் ஆற்றங்கரைகளில் இருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளிகள் மூடல்: சிவப்பு எச்சரிக்கையை அடுத்து, ஜூன் 30 திங்கட்கிழமையன்று அனைத்து பள்ளிகளையும் மூடுமாறு காங்க்ரா, மண்டி, சோலன் மற்றும் சிர்மவுர் மாவட்டங்களின் துணை ஆணையர்களுக்கு முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு உத்தரவிட்டார்.
சோலனின் கோடி பகுதிக்கு அருகே தண்டவாளங்களில் பாறைகள் மற்றும் மரங்கள் விழுந்ததால் சிம்லா-கல்கா ரயில் பாதையில் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.