ஸ்ரீநகர்: அமர்நாத்தில் நடைபெற உள்ள பனிலிங்க தரிசன யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்கு பல் அடுக்கு பாதுகாப்பு அளிக்க காஷ்மீர் போலீஸ் டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
ஜம்மு-காஷ்மீரிலுள்ள அமர்நாத்தில் இயற்கையாகவே உருவாகும் பனிலிங்கத்தைத் தரிசிக்கும் யாத்திரை வரும் ஜூலை 3-ம் தேதி தொடங்கவுள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த யாத்திரையில் கலந்துகொள்ளவுள்ளனர். பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் இப்பகுதியில் கூடுதல் போலீஸாரும், பாதுகாப்புப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அனந்த்நாக் பகுதியில் பாதுகாப்புப் பணிகளை ஆய்வு செய்த காஷ்மீர் போலீஸ் டிஜிபி வி.கே. பிர்டி நேற்று கூறியதாவது: அமர்நாத் பனிலிங்க யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படவுள்ளன. இந்த யாத்திரை எந்தவிதப் பிரச்சினையும் இன்றி சுமூகமாக நடைபெற பல் அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். முக்கிய இடங்களில் கூடுதலாக ராணுவத்தினர் நிறுத்தப்படுவர்.
இதன்மூலம் யாத்திரை பாதுகாப்பானதாகவும், பிரச்சினையின்றியும் நடைபெறும். கடந்த ஆண்டை விட கூடுதலாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார். இதைத் தொடர்ந்து நுன்வான் அடிவாரப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பனிலிங்க தரிசன யாத்திரை முகாமை டிஜிபி பிர்டி பார்வையிட்டார். மொத்தம் 38 நாட்கள் இந்த யாத்திரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.