‘அஞ்சான்’ படத்தின் புதிய வெர்ஷன் விரைவில் வெளியாகும் என்று இயக்குநர் லிங்குசாமி தெரிவித்துள்ளார்.
2014-ம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான படம் ‘அஞ்சான்’. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான இப்படம் தோல்வியை தழுவியது. இப்படத்தினை விளம்பரப்படுத்திய விதம் குறித்து இப்போதும் திரையுலகில் பலரும் குறிப்பிடுவார்கள். தற்போது இப்படத்தின் புதிய வடிவம் விரைவில் வெளியாகும் என்று இயக்குநர் லிங்குசாமி குறிப்பிட்டுள்ளார்.
‘அஞ்சான்’ படத்தின் புதிய வடிவம் குறித்து லிங்குசாமி, “இந்தியில் அப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. ‘அஞ்சான்’ படத்தினை மணிஷ் என்பவர் வாங்கி அதனை புதிய வடிவத்தில் எடிட் செய்திருந்தார். அதனை பார்த்துவிட்டு மிரண்டுவிட்டேன். இது நமக்கு தோன்றவில்லையே என நினைத்தேன். அந்த வடிவத்தை தமிழில் வெளியிடும் வேலைகள் நடந்துக் கொண்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் உருவான படம் ‘அஞ்சான்’. இதில் சூர்யா, சமந்தா, வித்யூத் ஜாம்வால், மனோஜ் பாஜ்பாய், சூரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதன் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன், இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்திருந்தனர்.