அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் வெளியான ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தினை இந்தியளவில் உள்ள திரையுலக பிரபலங்கள் பலரும் பார்த்து பாராட்டியிருக்கிறார்கள். இப்படத்தினை பார்த்துவிட்டு ரஜினிகாந்த் என்ன சொன்னார் என்பதை சசிகுமார் அளித்த பேட்டியொன்றில் குறிப்பிட்டு இருந்தார். இயக்குநரும் ரஜினி தன்னிடம் தொலைபேசியில் பேசிய புகைப்படத்தினை பகிர்ந்திருந்தார்.
தற்போது ரஜினியை நேரில் சந்தித்திருக்கிறார் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த். இது தொடர்பாக, “நான் சினிமாவுக்குள் கால் பதித்ததற்கான காரணமே இன்று நிறைவாக உணர்கிறேன். அவர் என் பெயரைச் சொல்லி என்னைக் கட்டிப்பிடித்த விதம், என் உடம்பெல்லாம் ஒரே சிலிரிப்பு. நான் சிறுவயதில் செய்த ஒவ்வொரு பிரார்த்தனையும் தாமதமாக வந்துவிட்டது போலவும், ஆனால் அது எனக்குத் தேவையான நேரத்தில் வந்தது போலவும் அவரது ஒரு புன்னகை இருந்தது.
என்ன ஒரு மனிதர், எளிமை மற்றும் மகத்துவத்தின் சின்னம். இந்த தருணத்தை விட பெரிய உந்துதலையோ அல்லது ஆசிர்வாதத்தையோ என்னால் கேட்க முடியாது. என்றென்றும் உங்களை நேசிக்கிறேன் ரஜினிகாந்த் சார். இந்த அன்புக்கும் சந்திப்புக்கும் எனது தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் அண்ணாவுக்கு மிக்க நன்றி. செளந்தர்யா மேடம் உங்களைச் சந்தித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நன்றி” என்று தெரிவித்துள்ளார் அபிஷன் ஜீவிந்த்.