‘கைதி 2’ படத்தில் அனுஷ்கா நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியானது வெறும் வதந்தி என்று தகவல் வெளியாகியுள்ளது.
’கூலி’ படத்துக்குப் பின் நாயகனாக நடிக்கவுள்ள படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் லோகேஷ் கனகராஜ். அதனை முடிந்தவுடன் ‘கைதி 2’ படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தினை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் மற்றும் கே.வி.என் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளது. இதன் ஆரம்பகட்ட பணிகள் எதுவுமே தொடங்கப்படாமல் உள்ளது.
இதனிடையே, ‘கைதி 2’ படத்தில் அனுஷ்கா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின. இச்செய்தி பலராலும் பகிரப்பட்டு வைரலானது. இது தொடர்பாக விசாரித்த போது, ‘கைதி 2’ பணிகளே இன்னும் தொடங்கப்படாமல் இருக்கிறது. அதற்குள் எப்படி அனுஷ்கா நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியானது என்றே தெரியவில்லை என்றார்கள். அதில் உண்மையில்லை எனவும் குறிப்பிட்டார்கள்.
தற்போது நாயகனாக நடிக்கவுள்ள படத்துக்காக தற்காப்பு கலைகள் கற்று வருகிறார் லோகேஷ் கனகராஜ். இதற்காக தாய்லாந்தில் தங்கி இருக்கிறார். அத்துடன் ‘கூலி’ படத்துடன் இறுதிகட்டப் பணிகளையும் மேற்பார்வையிட்டு வருகிறார் லோகேஷ் கனகராஜ்.