புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது எப்-16 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதா? என்ற கேள்விக்கு பாகிஸ்தானிடம் கேட்குமாறு அமெரிக்கா பதில் அளித்துள்ளது.
பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீதான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்தியாவின் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ மற்றும் விமானப்படை தளங்கள் சேதமடைந்தன. இதில் அமெரிக்க நிறுவன தயாரிப்பான எப்-16 உள்ளிட்ட போர் விமானங்களும் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் பாகிஸ்தானின் 6 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய விமானப் படை தளபதி சமீபத்தில் கூறியிருந்தார். இதில் எப்-16 ரக விமானமும் அடங்கும்.
இந்நிலையில், தொலைக்காட்சி நிறுவனம் சார்பில், அமெரிக்க தகவல் சுதந்திர சட்டத்தின் கீழ் (எப்ஓஐஏ) அந்நாட்டு வெளியுறவுத் துறை மற்றும் பாதுகாப்புத் துறையிடம் சில கேள்விகளை கேட்டிருந்தது. குறிப்பாக, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது எப்-16 ரக விமானங்கள் சேதமடைந்தது தொடர்பான விவரங்கள் கேட்கப்பட்டிருந்தன. இந்தக் கேள்விகளுக்கு பதில் அளிக்க அமெரிக்கா மறுத்துவிட்டது. அத்துடன் இதுபற்றி பாகிஸ்தான் அரசிடம் கேட்குமாறு தெரிவித்துள்ளது.