புதுடெல்லி: மண்ணின் மைந்தர்களாக இருந்த தாக்கரேவின் குடும்பம் தற்போது இந்தியாவின் சுற்றுலாப் பயணிகளாக மாறிவிட்டனர் என்று சிவசேனா எம்பி மிலிந்த் தியோரா குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் சமூக வலைதள எக்ஸ் பதிவில் கூறியதாவது: ஒரு காலத்தில் மண்ணின் மைந்தர் என்று பெருமையாக சொல்லிக்கொண்ட சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரேவின் குடும்பம் தற்போது இந்தியாவின் சுற்றுலாப் பயணிகளாக மாறிவிட்டனர். பஹல்காமில் குண்டுகள் பாய்ந்து பலர் உயிரிழந்து கொண்டிருந்தபோது அவரின் குடும்பம் ஐரோப்பாவில் சந்தோஷமாக விடுமுறை கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தது. மகாராஷ்டிர தினத்துக்கும் அவரது குடும்பம் வரவில்லை. ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை.
சிவசேனா (யுபிடி) கட்சி தலைமை ஆடம்பர அரசியலை கடைபிடித்து வருகிறது. அதேநேரம், பஹல்காம் தாக்குதல் நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உறுதுணையாக நின்ற மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் தலைமையை பாராட்டியே ஆகவேண்டும்.
மகாராஷ்டிரா மாநிலத்துக்கு தேவை பகுதி நேர அரசியல்வாதிகள் அல்ல. எப்போதும் கடைமையாற்றும் போர் வீரர்கள்தான் நம்மாநிலத்துக்கு முக்கிய தேவை. இவ்வாறு மிலிந்த் தியோரா தெரிவித்துள்ளார்.