சென்னை: தமிழகத்தில் நேற்று 11 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியது. இந்நிலையில், கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மே 5, 6-ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னிந்திய பகுதிகளின்மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு – மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (மே 4) முதல் 9-ம் தேதி வரை ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
5-ம் தேதி கோவை, திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 6-ம் தேதி கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கும் 5 முதல் 7-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வழக்கமான அளவிலேயே இருக்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வெப்பநிலை 84 டிகிரி முதல் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கக்கூடும்.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை, விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் 5 செ.மீ., தென்காசி மாவட்டம் கருப்பாநதி அணை, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், கோவை மாவட்டம் வால்பாறையில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 45-50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக வேலூரில் 106 டிகிரி, திருத்தணியில் 104, சென்னை மீனம்பாக்கம், திருச்சி, மதுரை விமான நிலையம், கரூர் பரமத்தியில் 103, கடலூர், ஈரோடு, சேலத்தில் 102, நாகப்பட்டினம், மதுரை மாநகரத்தில் 101 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவானது.