சென்னை: பெங்களூருவில் பலத்த மழை பெய்ததால், அங்கு தரையிறங்க முடியாத 4 விமானங்கள் சென்னையில் தரையிறங்கின. பெங்களூருவில் நேற்று மாலை திடீரென்று பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. மோசமான வானிலை நிலவியதால், அங்கு விமான சேவை பாதிக்கப்பட்டது.
சிலிகுரியில் இருந்து 160 பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், ராஜ்கோட்டில் இருந்து 154 பயணிகளுடன் சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், ஐதராபாத்தில் இருந்து 137 பயணிகளுடன் சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், ஹாங்காங்கில் இருந்து சென்ற சரக்கு விமானம் ஆகிய 4 விமானங்கள் மோசமான வானிலையால் பெங்களூருவில் தரையிறங்க முடியவில்லை.
இதையடுத்து, அந்த 4 விமானங்களும் சென்னையில் வந்து தரையிறங்கின. அதேபோல், டெல்லியில் இருந்து சென்ற 2 விமானங்கள் திருப்பதியில் தரையிறங்கின. பெங்களூருவில் வானிலை சீரானதும், சென்னை மற்றும் திருப்பதியில் இருந்து விமானங்கள் பெங்களூரு சென்று தரையிறங்கின.