ராமேசுவரம்: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் ஆவணங்ளை அவருடைய குடும்பத்தினர் தேசிய ஆவணக் காப்பத்தில் ஒப்படைத்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் ஏழை மீனவக் குடும்பத்தில் பிறந்த அப்துல் கலாம், சிறந்த விஞ்ஞானியாகத் திகழ்ந்ததோடு மட்டுமின்றி, அனைத்துத் தரப்பு மக்களாலும் போற்றப்படும் குடியரசுத் தலைவராகவும் விளங்கினார்.
அப்துல் கலாம் ராமேசுவரம் பள்ளிவாசல் தெருவில் உள்ள தனது பூர்வீக வீட்டில் ‘மிஷன் ஆஃப் லைஃப்’ என்ற தலைப்பில் 2011-ம் ஆண்டு அருங்காட்சியத்தைத் தொடங்கினார். தற்போதும் இயங்கி வரும் அந்த அருங்காட்சியகத்தில் கலாம் எழுதிய புத்தகங்கள், விருதுகள், அரிய புகைப்படங்கள், ஏவுகணைகள், செயற்கைக்கோள்களின் மாதிரிகள், விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான ஆவணங்கள் இடம் பெற்றுள்ளன.
டெல்லியில் 2016-ம் ஆண்டு திறக்கப்பட்ட கலாம் அறிவுசார் மையத்தில் கலாம் பயன்படுத்திய புத்தகங்கள், அவரது கோட், சூட், பேனா, கலாமுக்கு வழங்கப்பட்ட பரிசுப்பொருட்கள் உள்ளிட்டவை மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
அதேபோல, ராமேசுவரத்தில் கலாமின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கட்டப்பட்டுள்ள அப்துல் கலாம் தேசிய நினைவகத்திலும், கலாம் சிறு வயது முதல் குடியரசுத் தலைவரானது வரையிலான அரிய புகைப்படங்கள், ஆவணங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், டெல்லியில் உள்ள தேசிய ஆவணக் காப்பகத்தில் கலாமின் அரிய ஆவணங்களை அவரது குடும்பத்தினர் கடந்த திங்கள்கிழமை ஒப்படைத்தனர். கலாம் பயன்படுத்திய பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்ட், ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு அடையாள அட்டைகள், அப்துல் கலாம் பல்வேறு பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் மாணவர்களிடையே ஆற்றிய உரைகளின் ஆடியோ, வீடியோக்கள், கலாம் எழுதிய கடிதங்கள், கலாமுக்கு வந்த கடிதங்கள், அரிய புகைப்படங்கள் உள்ளிட்டவை இதில் இடம்பெற்றுள்ளன.
இந்த ஆவணங்களை தேசிய ஆவணக் காப்பகத்தின் இயக்குநர் அருண் சிங்காலிடம், கலாமின் அண்ணன் மகன் ஜெயினுலாபுதீன், மகள் நசிமா மரைக்காயர், பேரன்கள் ஷேக் தாவுத், ஷேக் சலீம் ஆகியோர் வழங்கினர்.