சென்னை: சாம்சங் விவகாரத்தில் தொழிலாளர் துறை சரியாக நடந்து கொள்ளவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை, தியாகராய நகரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற தொழிலாளர் தின விழாவுக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: காஷ்மீர் சம்பவத்தை சிறுபான்மை மக்கள் மீது வெறுப்பு பிரச்சாரம் செய்ய பயன்படுத்தக் கூடாது.
சிந்து நதி நீரைப் பயன்படுத்தி பாகிஸ்தானில் 4.50 லட்சம் ஏக்கரில் விவசாயம் செய்யப்படுகிறது. 70 சதவீத மக்களின் குடிநீர் தேவையை சிந்து நதி நீர் பூர்த்தி செய்கிறது. சிந்து நதி நீரை பாகிஸ்தானுக்கு தர மாட்டோம் என்ற முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்படும். எனவே, வரி உயர்வை எதிர்த்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 29 தொழிலாளர் சட்டங்களை திருத்தி 4 தொழிலாளர் தொகுப்புகளாக மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதைக் கண்டித்து மே 20-ம் தேதி தொழிற்சங்கங்கள் சார்பில் பொது வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.
தமிழகத்தில் சாம்சங் தொழிலாளர்கள், சங்க பதிவுக்காகப் போராடினர். இதற்காக 25 தொழிலாளர்களை நிர்வாகம் தற்காலிக நீக்கம் செய்தது. பதிவு செய்யப்பட்ட சங்கம் உள்ள நிலையில் போட்டிக் குழுவை உருவாக்கி ஊதிய மாற்ற ஒப்பந்தத்தை அறிவித்துள்ளனர். இது தொழிலாளர் விரோத நடவடிக்கையாகும்.
சாம்சங் விவகாரத்தில் தொழிலாளர் துறை சரியாக நடந்து கொள்ளவில்லை. தொழிலாளர் ஆணையர் கட்டப் பஞ்சாயத்து போன்று செயல்பட்டுள்ளார். தமிழக அரசு இதில் தலையிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.