Last Updated : 01 May, 2025 02:37 PM
Published : 01 May 2025 02:37 PM
Last Updated : 01 May 2025 02:37 PM

புதுச்சேரி: புதுச்சேரியில் புதுப்பிக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம் நீண்ட இழுபறிக்கு பிறகு நாளை (மே 2) திறக்கப்படுகிறது.
புதுவை மறைமலை அடிகள் சாலையில் புதிய பேருந்து நிலையம் செயல்பட்டு வந்தது. புதிய பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் குறைபாட்டால் முழுவதுமாக இடிக்கப்பட்டு, புதிதாக கட்ட தீர்மானிக்கப்பட்டது. இதன்படி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.29.50 கோடி செலவில் பேருந்து நிலையத்தை மேம்படுத்தும் பணி கடந்த ஆண்டு தொடங்கியது.
இதனால் புதுவை பேருந்து நிலையம் கடலுார் சாலையில் உள்ள ஏஎஃப்டி மில் திடலில் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டது. திறந்தவெளி திடல் என்பதால் பேருந்து நிலையத்துக்கு தேவையான வசதிகள் ஏதும் இல்லை. புதிய பேருந்து நிலைய பணிகளை முடித்து உடனடியாக திறக்க வேண்டும் என அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் குரல் கொடுத்து வந்தன.
இந்த நிலையில் புதிய பேருந்து நிலையத்தில் பணிகள் முடிவடைந்தது. ஆனால் திறப்பு விழாவுக்கான தேதி மட்டும் அறிவிக்கப்படவில்லை. தொடர்ந்து ஒவ்வொரு தேதியாக கூறப்பட்டு வந்தது. இதனால் பேருந்து நிலைய பணிகள் முடிவடைந்தும் ஏன் திறக்கவில்லை? என மக்களிடையே அதிருப்தி எழுந்தது.
இதையடுத்து நீண்ட இழுபறிக்கு பிறகு புதிய பேருந்து நிலையத்தின் திறப்பு விழா நேற்றைய தினம் திறக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் திடீரென திறப்பு விழா ஒத்திவைக்கப்பட்டது. இதனால் ஆளுநர்- முதல்வர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் புதிய பேருந்து நிலைய திறப்பு விழா நாளை (மே 2) காலை 9.40 மணிக்கு நடக்கிறது. ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைக்கின்றனர். இதில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்கின்றனர். தொடர்ந்து நாளை நள்ளிரவு 12 மணி முதல் புதிய பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வருகிறது.
FOLLOW US
தவறவிடாதீர்!