நியூயார்க்: அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு, சீனா, கனடா, மெக்சிகோ, இந்தியா உட்பட பல நாடுகளுக்கு வரி விதிப்பை அதிகரித்துள்ளார்.
எந்தெந்த நாடுகள் அமெரிக்காவுக்கு எவ்வளவு வரி விதிக்கின்றனவோ அந்த அளவுக்கே பரஸ்பரம் வரி விதிப்பதாக அதிபர் ட்ரம்ப் உறுதியாக கூறியுள்ளார். இந்நிலையில் ஐ.நா. வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் (யுஎன்சிடிஏடி), செகரட்டரி ஜெனரல் ரெபெக்கா கிரின்ஸ்பேன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: பல நாடுகளுக்கு அதிக வரி விதித்துள்ளதால் உலகளவில் வர்த்தக கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏழை மக்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.
உலகளவிலான வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு உரியதாக வர்த்தகம் இருக்க வேண்டும். இன்றைய சவால்களை பிரதிபலிக்கும் வகையில் உலகளாவிய வர்த்தக விதிகள் உருவாக வேண்டும். ஏழை மக்கள் பெரிதும் பாதிக்காத வகையிலும் மேம்பாட்டை கருத்தில் கொண்டும் வர்த்தகம் அமைய வேண்டும். இது ஒத்துழைப்புக்கான நேரமே தவிர சிக்கலை அதிகரிப்பதற்கான நேரமல்ல. இவ்வாறு ரெபெக்கா கிரின்ஸ்பேன் கூறியுள்ளார்.