தொடர்ச்சியாக காங்கிரஸ் வசம் இருந்த சிவகாசி நகராட்சியானது கடந்த உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாக மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து, காங்கிரஸை ஒதுக்கிவிட்டு மேயர், துணை மேயர் பதவிகளை திமுக கைப்பற்றியது. இப்போது அடுத்த அதிரடியாக சிவகாசி எம்எல்ஏ பதவியையும் காங்கிரஸிடமிருந்து கைப்பற்றுவதற்கான முயற்சிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னெடுத்து வருவதாகச் சொல்கிறார்கள்.
1920-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் உருவாக்கப்பட்ட சிவகாசி நகராட்சியின் நூற்றாண்டு வரலாற்றில் 2011-ல் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது. மற்ற அனைத்துத் தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சியே சிவகாசி நகர்மன்ற தலைவர் பதவியை கைப்பற்றி உள்ளது. திமுக ஒரு முறை கூட நகர்மன்றத் தலைவர் பதவியை கைப்பற்றியதில்லை. கடந்த உள்ளாட்சி தேர்தலில் இந்த பாரம்பரியத்தைச் சொல்லி, முதல் மேயர் பதவியை கைப்பற்ற காங்கிரஸ் காய் நகர்த்தியது.
ஆனால், மொத்தமுள்ள 48 வார்டுகளில் 32 வார்டுகளில் போட்டியிட்ட திமுக, காங்கிரஸுக்கு 12 வார்டுகளை மட்டுமே ஒதுக்கியது. இதனால் காங்கிரஸின் மேயர் கனவு தகர்ந்து போனது. மேயர், துணை மேயர், மண்டலத் தலைவர்கள் உள்ளிட்ட அத்தனை பொறுப்புகளையும் திமுக-வே கைப்பற்றியது.
இதன் அடுத்த நகர்வாக தற்போது காங்கிரஸ் வசமுள்ள சிவகாசி எம்எல்ஏ பதவியையும் கைப்பற்ற திமுக களமிறங்கி இருப்பதாகச் சொல்கிறார்கள். 1962-ல் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ், அதன் பிறகு கடந்த தேர்தலில் தான் வென்றது. திமுக-வும் இந்தத் தொகுதியில் 1989-க்குப் பிறகு ஜெயிக்கவில்லை. அதிகபட்சமாக இந்தத் தொகுதியில் அதிமுக தான் 5 முறை வென்றுள்ளது.
இந்த நிலையில் தான், இம்முறை சிவகாசி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட சிவகாசி மாநகரச் செயலாளர் உதயசூரியன், மேயர் சங்கீதா, முன்னாள் யூனியன் சேர்மன் முத்துலட்சுமி ஆகியோர் இப்போதே ஆட்களைப் பிடித்து காய்நகர்த்த ஆரம்பித்திருக்கிறார்கள். மாவட்ட அமைச்சரான தங்கம் தென்னரசுவும் இம்முறை சிவகாசியில் உதயசூரியன் உதிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகச் சொல்கிறார்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய சிவகாசி திமுக பொறுப்பாளர்கள் சிலர், “அமைச்சர் தங்கம் தென்னரசு ஆரம்பத்தில் இருந்தே சிவகாசியில் திமுக-வை வெற்றி பெற வைக்க தீவிர முயற்சி எடுத்து வருகிறார். கடந்த முறை திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்எல்ஏ-வான அசோகன், சிவகாசி மேயர் பதவியை காங்கிரஸுக்கு ஒதுக்க வைக்க முயற்சி எடுத்தார்.
ஆனால், அமைச்சர் தங்கம் தென்னரசு அதை நடக்கவிடவில்லை. சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம், சிவகாசி சுற்றுச்சாலை, சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்வு, கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்டவை அசோகன் தனது முயற்சியாலேயே நடந்ததாக விளம்பரப்படுத்தியதை அமைச்சர் ரசிக்கவில்லை. இதுக்கு நடுவில், அண்மையில் விருதுநகருக்கு வந்திருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசும்போது இம்முறை சிவகாசி தொகுதியில் திமுக வெற்றி பெறவேண்டும் என அறிவுறுத்தினார்.

இதையடுத்து சிவகாசி தொகுதியில் திமுக தான் இம்முறை போட்டியிடும் என அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதியாகச் சொல்லி இருக்கிறார்” என்றனர். மீண்டும் சிவகாசி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுமா என எம்எல்ஏ-வான அசோகனிடம் கேட்டதற்கு, “2026-ல் சிவகாசி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுமா என்பதை தமிழக முதல்வர் ஸ்டாலினும், காங்கிரஸ் தலைமையும்தான் முடிவு செய்யும். யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிட விருப்பப்படலாம். எம்எல்ஏ-வாக சிவகாசிக்கு நான் செய்திருக்கும் சாதனைகள் நிறைய இருக்கிறது.
இன்னும் மக்களுக்கு செய்ய வேண்டிய திட்டங்களும் இருக்கிறது. அதனால் கூட்டணியில் சிவகாசி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டால் கட்சித் தலைமையிடம் மீண்டும் போட்டியிட கட்டாயம் வாய்ப்புக் கேட்பேன்” என்றார். முதல்வரின் நம்பிக்கைக்குரிய அமைச்சர்களில் ஒருவரான தங்கம் தென்னரசுவின் விருப்பத்தை மீறி சிவகாசியில் இம்முறையும் கை சின்னமே போட்டியிடுமா என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்!