கராச்சி: வங்கதேச கிரிக்கெட் அணி இம்மாத இறுதியில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது.
வங்கதேச கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இடம் பெற்ற இந்த தொடரை வங்கதேச அணி 2-0 என முழுமையாக கைப்பற்றியது. இந்த சுற்றுப்பயணத்தின் தொடர்ச்சியாக குறுகிய வடிவிலான போட்டிகளில் பங்கேற்பதற்காக வரும் 21-ம் தேதி பாகிஸ்தான் செல்கிறது வங்கதேச அணி.
அங்கு 5 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணி விளையாடுகிறது. இந்தத் தொடர் முதலில் 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 ஆட்டங்களை கொண்டவையாக நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அடுத்த ஆண்டில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளதால் முழுமையாக 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடராக நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கு வங்கதேச கிரிக்கெட் வாரியமும் சம்மதித்துள்ளது.
டி20 தொடர் மே 25 முதல் ஜூன் 3-ம் தேதி வரை பைசலாபாத், லாகூரில் நடைபெறுகிறது. முதல் இரு ஆட்டங்கள் மே 25, 27-ம் தேதிகளில் பைசலாபாத்தில் உள்ள இக்பால் மைதானத்தில் நடைபெறுகிறது. பைசலாபாத்தில் 17 வருடங்களுக்குப் பிறகு தற்போதுதான் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. கடைசியாக இங்கு 2008-ம் ஆண்டு சர்வதேச போட்டி நடைபெற்றிருந்தது. டி20 தொடரின் கடைசி 3 ஆட்டங்களில் லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் மே 30, ஜூன் 1, 3-ம் தேதிகளில் நடைபெறுகிறது.