சென்னை: தங்கம் விலை அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ள நிலையிலும், அட்சய திருதியை நாளன்று வழக்கம்போல் நகைக் கடைகளில் விற்பனை களைகட்டியது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தங்கம் விற்பனை 20 சதவீதம் அதிகரித்துள்ளது.
சித்திரை மாதத்தில் அமாவாசைக்குப் பிறகு 3-வது நாளில் வரும் வளர்பிறை திதி அட்சய திருதியை என அழைக்கப்படுகிறது. இந்த நாளில் தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்ற நம்பிக்கையும் ஐதீகமும் மக்களிடம் உள்ளது.
இந்த ஆண்டு அட்சய திருதியை திதி நேற்று முன்தினம் இரவு 8.40 மணிக்குத் தொடங்கி நேற்று மாலை 6.45 மணி வரை நீடித்தது. அதேநேரம் தங்கத்தின் விலை கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கடும் ஏற்றத்தில் உள்ளது. ஆனால், தங்கம் விலை என்னதான் ஏறினாலும், ஒரு குண்டுமணி அளவுக்காவது வாங்க வேண்டும் என என்பதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டினர்.
இதனால், வாடிக்கையாளர்களை கவர, நகைக் கடைகள் போட்டி போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்தன. இதன்படி, தங்க நகைகள் பவுனுக்கு ஆயிரம் ரூபாய் வரையும், வைர நகைகள் காரட்டுக்கு ரூ.15 ஆயிரம் வரையிலும், வெள்ளி கிலோ ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வரையும் தள்ளுபடி வழங்கப்பட்டது. சில கடைகளில் தங்கம் மற்றும் வெள்ளி நகைககளுக்கு செய்கூலி, சேதாரம் தள்ளுபடியும் வழங்கின. அத்துடன், புதிய புதிய டிசைன்களில் நகைகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும், 10 நாட்களுக்கு முன்தாகவே முன்பதிவும் தொடங்கப்பட்டது.
தலைநகர் சென்னையில் மட்டும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நகைக்கடைகள் உள்ளன. தி.நகர், புரசைவாக்கம், பாரிமுனை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று காலை 6 மணிக்கே நகைக் கடைகள் திறக்கப்பட்டன. பெண்கள் தங்களுக்கு பிடித்த நகைகளை வாங்கினர்.
இதனால், நகைக் கடைகளில் கூட்டநெரிசல் காணப்பட்டது. வாடிக்கையாளர்களுக்கு நகைக் கடை நிர்வாகம் சார்பில் பழரசம், மோர், தர்ப்பூசணி பழம் உள்ளிட்ட குளிர்ச்சியான பொருட்கள் சாப்பிட வழங்கப்பட்டன. அட்சய திருதியை முன்னிட்டு தங்க நாணயங்கள் வாங்க வந்தவர்களுக்கு சிறப்புக் கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.
இதுகுறித்து, சென்னை தங்க நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சாந்தகுமார் கூறும்போது, ‘‘கடந்த ஆண்டு அட்சய திருதியை தினத்தன்று ஒரு பவுன் ரூ.53,280-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு ஒரு பவுன் ரூ.71,840-க்கு விற்பனையாகிறது. இது 35 சதவீதம் அதிகம் ஆகும். அடுத்த ஆண்டு ஒரு பவுன் ரூ.1.10 லட்சம் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் தங்கம் விலை அதிகரித்துள்ள நிலையிலும், வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என எண்ணி முதலீட்டு நோக்கத்தில் இந்த அட்சய திருதியை நாளில் அதிகளவு தங்கம் வாங்கினர். வாடிக்கையாளர்களை கவர்வதற்காக, தங்கக் காசுகளுக்கு டையிங் கட்டணம் தள்ளுபடி, அதேபோல் வெள்ளி நகைகளுக்கு செய்கூலி, சேதாரம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால், பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து நகை வாங்கினர்’’ என்றார்.
இதற்கிடையே, தங்கம் விலை நேற்று எவ்வித மாற்றமும் இன்றி நேற்று முன்தினம் விலையான ஒரு பவுன் ரூ.71,840-க்கு விற்பனை ஆனது. அதேபோல், வெள்ளி விலையும் நேற்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.111-க்கும் ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.1,11,000-க்கும் விற்பனையானது.