மாமல்லபுரம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் மலைக்கோயிலின் கிரிவலப்பாதையில் அடிப்படை தேவைகளை பேரூராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வரும் நிலையில், கோயில் நிலத்தில் அனுமதியின்றி பணி செய்வதா என கோயில் நிர்வாகம் முட்டிக் கொள்வதால் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் நகரின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் அமைந்துள்ளது. மலைமீது சுயம்பு மூர்த்தியாக சுவாமி வேதகிரீஸ்வரர் அருள்பாலிப்பதால், பவுர்ணமி நாட்களில் கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மேலும், மலைக்கோயிலில் இருந்து கீழே வரும் பாதையில் கல்மண்டபம் ஒன்று அமைந்துள்ளது. முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் காலத்தைச் சேர்ந்த இந்த ஒரு கல்மண்டபம் குடவரை சிற்பமாக அமைந்துள்ளது. மேலும், மலைக்கோயிலின் அடிவாரத்தில் அமைந்துள்ள கோயிலில் பக்தவச்சலேஸ்வரர் மற்றும் திரிபுரசுந்தரி அம்பாள் ஆகியோர் அருள்பாலித்து வருகின்றனர்.
இக்கோயிலுக்கு வெளிமாவட்டங்கள் மற்றும் வடமாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்து செல்கின்றனர். ஆனால், வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் தங்கி செல்வதற்கு போதிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படாமல் உள்ளன. மேலும், பவுர்ணமி நாட்களில் கிரிவலம் வரும் பக்தர்களுக்கு கிரிவலபாதையில் கோயில் நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் ஏதும் மேற்கொள்ளப்படாமல் உள்ளது.
இதனால், இரவு நேரங்களில் கிரிவலம் வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் குடிநீர், கழிப்பறை அடிப்படை வசதிகள் இல்லாமல் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இயற்கை உபாதைகளை திறந்த வெளியில் புதர்களில் கழிப்பதால் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.

இதனால், கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகம் அல்லது பேரூராட்சி நிர்வாகத்தினர் மேற்கொள்ள வேண்டும் என நீண்ட நாட்களாக உள்ளூர் மக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், கோயில் நிர்வாகம் தங்களிடத்தில் போதிய நிதி ஆதாரம் இல்லை எனக்கூறி அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவில்லை என தெரிகிறது.
இதனால், பேரூராட்சி நிர்வாகம் கிரிவலப்பாதையை பராமரிப்பதோடு, அப்பாதையில் பக்தர்களுக்கு தேவையான இருக்கைகள், குடிநீர் தொட்டிகள் அமைத்துள்ளது. மேலும், ரூ.21 லட்சம் மதிப்பில் கழிப்பறை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், மலையை சுற்றியுள்ள நிலம் கோயிலுக்குச் சொந்தமானது என்றும் அதனால், தங்களின் அனுமதி பெறாமல் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என கோயில் நிர்வாகத்தினர் வலியுறுத்துகின்றனர்.
இதனால், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதில் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் கோயில் நிர்வாகம், பேரூராட்சி நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என பக்தர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பக்தர்கள் தங்கும் விடுதி கட்டிடம்.
இதுகுறித்து, உள்ளூர் பொதுமக்கள் கூறியதாவது: கிரிவலம் வரும் நாட்களில், பக்தர்கள் இளைப்பாறுவதற்கு கூட இருக்கைகள் இல்லை. மேலும், கடும் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பெண்கள் அச்சம் கொள்கின்றனர். இதனால் பேரூராட்சி நிர்வாகம் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், கோயில் நிலம் எனக்கூறி மேம்பாட்டு பணிகளுக்கு கோயில் நிர்வாகம் எதிர்ப்பு தெரிவிக்கிறது. உண்மையில் அவை மலை புறம்போக்கு என்று ஆவணத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2008-ம் ஆண்டு தன்னிறைவு திட்டத்தில் மலைக்கோயிலின் கிரிவலப்பாதையில் 8 அறைகளுடன் கூடிய பக்தர்கள் தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டன. ஆனால், விடுதியை கோயில் நிர்வாகம் பக்தர்களின் பயன்பாட்டுக்கு வழங்காமலேயே பாழடைந்த கட்டிடமாக மாற்றியுள்ளது. மேலும், பக்தவச்சலேஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பயன்படுத்தவும் கோயில் அருகில் கழிப்பறை இல்லை.
அதேபோல் மலையடிவாரத்தில் பக்தர்களின் உடைமைகளை வைப்பதற்கான பாதுகாப்பு அறைகள் ஏற்படுத்த வேண்டும் என பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், கோயில் நிர்வாகத்தின் தரப்பில் இதுவரையில் எந்த நடவடிக்கையும் இல்லை. கிரிவலப்பாதையில் உள்ள நிலங்களை, பாதுகாக்க வேண்டியது எங்களின் கடமை எனக்கூறும் கோயில் நிர்வாகம், தனிநபர்கள் நகரப்பகுதியில் ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்கவும் வரிகளை வசூலிக்கவும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், பேரூராட்சி நிர்வாகம், பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் தேவைக்காகவே செய்கிறது என்பதை கோயில் நிர்வாகம் கருத்தில் கொள்ள வேண்டும்.
மக்கள் பெருக்கத்துக்கு ஏற்றவாறு அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டியது அவசியம். அதனால், பக்தர்களின் அடிப்படை தேவைகளை கருத்தில்கொண்டு இரு அரசுத்துறைகளும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை தெரிவிக்காமல் ஒருங்கிணைந்து மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.