புதுடெல்லி: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருப்பதாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி, சிவராஜ் சிங் சவுகான், எஸ். ஜெய்சங்கர், தர்மேந்திர பிரதான், பியூஷ் கோயல், அஸ்வினி வைஷ்ணவ், மனோகர் லால் கட்டார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அஸ்வினி வைஷ்ணவ், “வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதிவாரி கணக்கெடுப்பு சேர்க்கப்பட வேண்டும் என்று அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு இன்று முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, அது எப்போதும் சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்த்தே வந்துள்ளது. 2010 ஆம் ஆண்டில், மறைந்த மன்மோகன் சிங், சாதிவாரி கணக்கெடுப்பு விஷயத்தை அமைச்சரவையில் பரிசீலிக்க வேண்டும் என்று கூறினார். இந்த விஷயத்தை பரிசீலிக்க அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது. பெரும்பாலான அரசியல் கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தியதை அடுத்தே, காங்கிரஸ் அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்தது.
காங்கிரஸும் இண்டியா கூட்டணி கட்சிகளும் சாதிவாரி கணக்கெடுப்பை ஒரு அரசியல் கருவியாக மட்டுமே பயன்படுத்தியுள்ளனர் என்பது நன்கு புரிந்து கொள்ளப்படுகிறது. சில மாநிலங்கள் சாதிகளைக் கணக்கிட கணக்கெடுப்புகளை நடத்தியுள்ளன. சில மாநிலங்கள் இதைச் சிறப்பாகச் செய்திருந்தாலும், வேறு சில மாநிலங்கள் அரசியல் கோணத்தில் இருந்து மட்டுமே இத்தகைய கணக்கெடுப்புகளை நடத்தின. இத்தகைய கணக்கெடுப்புகள் சமூகத்தில் சந்தேகங்களை ஏற்படுத்தின. அரசியலால் நமது சமூக அமைப்பு பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய, மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதிவாரி கணக்கெடுப்பு சேர்க்கப்பட வேண்டும்.” என தெரிவித்தார்.
மேலும் அவர், “ஷில்லாங்கிலிருந்து சில்சார் வரை ரூ.22,864 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் அதிவேக வழித்தட நெடுஞ்சாலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதோடு, 2025-26 சர்க்கரை பருவத்திற்கான கரும்புக்கு நியாயமான மற்றும் லாபகரமான விலை குவிண்டாலுக்கு ரூ.355 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கும் கீழாக விலை நிர்ணயிக்க முடியாது.” என தெரிவித்தார்.