உதகை: உதகை எல்க்ஹில் முருகன் கோயில் கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம் உதகை எல்க்ஹில் பகுதியில் பழமையான முருகன் கோயில் உள்ளது. மாநில அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில் பிரபலமான மலேசியா முருகன் கோவிலில் உள்ளதை போன்ற, 44 அடி உயர முருகன் சிலை உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா பிரசித்தி பெற்றதாகும்.
எல்க்ஹில் முருகன் கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கோபுரங்கள் வண்ணம் பூசப்பட்டு பொலிவுப்படுத்தப்பட்டது. இந்நிலையில், இன்று காலை 5.30 மணிக்கு மேல் நான்காம் கால வேள்வி, மூலிகை பொருட்கள் வேள்வி, தீபாராதனை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மஹா கும்பாபிஷேகம் இன்று காலை 10:15 மணிக்கு வெகு விமரிசையாக நடைபெற்றது. கும்பாபிஷேகம் நடைபெற்ற போது பக்தர்கள் அரோகரா, அரோகரா என்று கோஷமிட்டு முருகன் பெருமானை பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். விழாவில், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், ராமானந்த குமரகுருபர சுவாமிகள், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர்.