சென்னை: நாட்டின் முன்னணி வங்கிசாரா நிதி நிறுவனங்களில் ஒன்றான எல் அண்ட் டி பைனான்ஸ், 2024-25நிதியாண்டில், வரிக்குப் பிந்தைய லாபமாக ரூ.2,644 கோடியை ஈட்டியுள்ளது. இது, இதுவரை இல்லாத உயர்வு ஆகும்.
மேலும், முந்தைய ஆண்டைவிட 14% வளர்ச்சி ஆகும். மார்ச் 31, 2025 உடன் முடிந்த 4-வது காலாண்டில் இந்நிறுவனம் ரூ.636 கோடியை வரிக்குப் பிந்தைய லாபமாக ஈட்டியிருக்கிறது. இது, முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தைவிட 15% அதிகம் ஆகும்.
கடந்த 2023-24 நிதியாண்டோடு ஒப்பிடுகையில் 2024-25 நிதியாண்டில் சில்லரை கடன்கள் 19% உயர்ந்து, ரூ.95,180 கோடியாகி உள்ளது. இந்நிறுவனத்தின் இயக்குநரவைக் கூட்டம் கடந்த 25-ம் தேதி நடைபெற்றது.
இதில், 2024-25 நிதியாண்டுக்கான பங்காதாயமாக (டிவிடெண்ட்) பங்கு ஒன்றுக்கு ரூ.2.75- ஐ அறிவித்தது. இந்நிறுவனம் இதுவரை அறிவித்ததிலேயே இதுதான் அதிகபட்சம் ஆகும். டிவிடெண்ட் தொகை 30 நாட்களுக்குள் முதலீட்டாளர்கள் கணக்கில் வரவு
வைக்கப்படும்.