திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித் தேரோட்டம் இன்று (ஏப்.7) நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவாரூக்கு வந்துள்ளனர்.
பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா மார்ச் 15-ம் தேதி தொடங்கியது. திணும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. முக்கிய நிகழ்வான ஆழித் தேரோட்டம் இன்று நடைபெறுகிறது. ஏறத்தாழ 96 அடி உயரமும், 350 டன் எடையும்
கொண்ட ஆழித்தேர் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி நேற்று இரவு 8 மணியளவில் தியாகராஜ சுவாமி, அஜபா நடனத்துடன் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து, இன்று காலை 5.30 மணி அளவில் விநாயகர், சுப்பிரமணியர், தேர் வடம் பிடிக்கப்படும். காலை 7:30 மணிக்கு ஆழித் தேரோட்டம் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பல்லாயிரக்கணக்கானோர் வடம் பிடித்து தேர் இழுக்கின்றனர்.
ஆழித் தேரோட்டத்தையொட்டி, திருவாரூர் மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருவாரூர் நகரில் உள்ள டாஸ்மாக் மதுபானகடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. திருவாரூர் எஸ்.பி. கருண்கரட் தலைமையில் 2.000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆழித் தேரோட்டத்தில் பங்கேற்பதற்காக திருவாரூர் மட்டுமின்றி, வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவாரூரில் குவிந்துள்ளனர்.