புதுடெல்லி: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி 9 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 3 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. டெல்லி அணி தனது கடைசி 4 ஆட்டங்களில் 2-ல் தோல்வியை சந்தித்துள்ளது. இதில் நேற்று முன்தினம் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததும் அடங்கும்.
தொடக்க பேட்ஸ்மேன்களில் அபிஷேக் போரெல் தனது அதிரடியால் பலம் சேர்க்கிறார். ஆனால் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள டு பிளெஸ்ஸிஸ், பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் மந்தமான ஆடுகளத்தில் ரன்கள் சேர்க்க மிவும் சிரமப்பட்டார். நடப்பு சசீசனில் 364 ரன்கள் சேர்த்துள்ள கே.எல்.ராகுலும் நடு ஓவர்களில் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக ரன்கள் சேர்க்க தடுமாறினார். கருண் நாயர், அக்சர் படேல், அஷுதோஷ் சர்மா ஆகியோரும் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தத் தவறினர். இதனால் இன்றைய ஆட்டத்தில் டெல்லி அணியின் நடுவரிசை பேட்ஸ்மேன்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படக்கூடும்.
பந்துவீச்சில் கடந்த ஆட்டத்தில் அக்சர் படேல் 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். ஆனால் மற்ற வீரர்களிடம் இருந்து சிறந்த திறன் வெளிப்பட
வில்லை. மிட்செல் ஸ்டார்க் விக்கெட் ஏதும் கைப்பற்றாமல் ஏமாற்றம் அளித்தார். இன்றைய ஆட்டத்தில் அவர், பார்முக்கு திரும்புவதில் கவனம் செலுத்தக்கூடும். மேலும் நடப்பு சீசனில் ஓவருக்கு சராசரியாக 6.55 ரன்களை மட்டுமே வழங்கி வரும் குல்தீப் யாதவ், கொல்கத்தா பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்க முயற்சிக்கக்கூடும். பீல்டிங்கில் டெல்லி அணி கூடுதல் கவனம் செலுத்தக்கூடும். ஏனெனில் கடந்த ஆட்டத்தில் முக்கியமான கட்டத்தில் பெங்களூரு அணியின் கிருணல் பாண்டியா கொடுத்த கேட்ச்சை அபிஷேக் போரெல் தவறவிட்டிருந்தார்.
அஜிங்க்ய ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 5 தோல்வியுடன் 7 புள்ளிகள் பெற்று பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. கடைசியாக சொந்த மண்ணில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக மோதிய ஆட்டம் மழை காரணமாக முடிவு எட்டப்படாமல் கைவிடப்பட்டிருந்தது. இதன் மூலம் அந்த அணி கடைசியாக விளையாடிய 3 ஆட்டங்களிலும் வெற்றியை வசப்படுத்தவில்லை.
பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் எஞ்சிய ஆட்டங்களில் கணிசமான வெற்றிகளை குவித்தாக வேண்டும் என்ற நெருக்கடியுடன் கொல்கத்தா அணி இன்றைய ஆட்டத்தை அணுகுகிறது. பேட்டிங்கில் அஜிங்க்ய ரஹானே, அங்ரிஷ் ரகுவன்ஷி ஆகியோரை மட்டுமே அணி நம்பி உள்ளது. தொடக்க பேட்டிங்கில் சுனில் நரேனிடம் எதிர்பார்த்த அளவிலான தாக்குதல் ஆட்டம் வெளிப்படவில்லை. குயிண்டன் டி காக்கிற்கு பதிலாக களமிறக்கப்பட்ட ரஹ்மனுல்லா குர்பாஸிடம் இருந்தும் பெரிய அளவிலான ஆட்டம் வெளிப்படாதது ஏமாற்றம் அளித்துள்ளது.
நடுவரிசையில் வெங்கடேஷ் ஐயர், ஆந்த்ரே ரஸ்ஸல், ரிங்கு சிங், ரமன்தீப் சிங் ஆகியோர் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிலான செயல்திறனை வெளிப்படுத்துவதில் தடுமாறி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க கொல்கத்தா அணியின் பந்துவீச்சு இம்முறை பலவீனமாக மாறி உள்ளது. தொடக்க விக்கெட்களை கைப்பற்றுவதில் கொல்கத்தா அணி உத்வேகமின்றி செயல்படுகிறது.
சுழலில் சுனில் நரேன், வருண் சக்ரவர்த்தி கூட்டணியிடம் இருந்தும் எந்தவித மேஜிக்கும் வெளிப்படவில்லை. ஹர்திஷத் ராணா, வைபவ் அரோரா ஆகியோர் விக்கெட்கள் கைப்பற்றினாலும் அவை வெற்றிக்கு பங்களிப்பு செய்வதாக இல்லை. கொல்கத்தா அணி வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டுமென்றால் ஒட்டுமொத்தமாக அனைத்து துறைகளிலும் மேம்பட்ட செயல்திறனை வெளிப்படுத்த வேண்டும்.