சென்னை: இளநிலை உணவக மேலாண்மை படிப்புகளுக்கு வரும் 27-ம் தேதி ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு நடைபெற உள்ள நகரங்கள் பட்டியலை என்டிஏ வெளியிட்டுள்ளது.
தேசிய உணவக மேலாண்மை மற்றும் உணவு தொழில்நுட்ப குழுமத்தின் (என்சிஎச்எம்சிடி) கீழ் இயங்கும் 78 கல்வி மையங்களில் பிஎஸ்சி விருந்தோம்பல் மற்றும் உணவக நிர்வாகம் படிப்பு கற்றுத் தரப்படுகிறது. இதில் சேர, ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (என்சிஎச்எம் ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும்.
இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி 2025-26-ம் கல்வி ஆண்டுக்கான என்சிஎச்எம் ஜேஇஇ நுழைவுத் தேர்வு கணினி வழியில் வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த டிசம்பர் 16-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 28-ம் தேதியுடன் நிறைவடைந்தது.
இந்நிலையில், தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ள நகரங்களின் விவரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதுபற்றி exams.nta.ac.in/NCHM என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். தேர்வுக்கான ஹால் டிக்கெட் விரைவில் வெளியிடப்படும்.
என்டிஏ இணையதளத்தில் (www.nta.ac.in) கூடுதல் தகவல்களை அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருந்தால் 011-40759000/ 69227700 என்ற தொலைபேசி எண் அல்லது nchm@nta.ac.in எனும் மின்னஞ்சலை மாணவர்கள் தொடர்பு கொள்ளலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.