பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சமூக அறிவியல் பாடத்தில் இடம்பெற்ற தவறான கேள்விக்கு மாணவர்கள் விடையளிக்க முயற்சி செய்திருந்தாலே, ஒரு மதிப்பெண் வழங்க அரசு தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவடைந்து, விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது. அதில், சமூக அறிவியல் விடைத்தாள் மதிப்பீட்டு பணி நேற்று தொடங்கியது.
இதற்கிடையே, அந்த பாடத்தில் ஒரு மதிப்பெண் வினா பகுதியில் 4-வது கேள்வியில் ‘கூற்று: ஜோதிபா பூலே ஆதரவற்றவர்களுக்கான விடுதிகளையும், விதவைகளுக்கான காப்பகங்களையும் திறந்தார். காரணம்: ஜோதிபா பூலே குழந்தை திருமணத்தை எதிர்த்தார். விதவைகள் மறுமணத்தை ஆதரித்தார்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கேள்வியில் 2 வாக்கியங்களுமே முரணாக இருப்பதாகவும், அதற்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், அந்த கேள்விக்கு மாணவர்கள் விடையளிக்க முயற்சி செய்திருந்தாலே, முழு மதிப்பெண் (ஒரு மார்க்) வழங்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்குநர் ந.லதா உத்தரவிட்டுள்ளார்.