தேனி: மலையாள புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் கனிதரிசன வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு புத்தம் புது நாணயங்கள் பரிசாக வழங்கப்பட்டன.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விழாவுக்காக கடந்த 2-ம் தேதி கொடியேற்றப்பட்டது. ஒவ்வொரு நாளும் பல்வேறு சிறப்பு வழிபாடுகளுடன் பூஜைகள் நடைபெற்றது. உச்சநிகழ்வாக கடந்த 10-ம் தேதி இரவு சரம்குத்தியில் பள்ளிவேட்டையும், 11-ம் தேதி காலை ஐயப்பனுக்கு புனித நீராட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விழா நிறைவடைந்து கொடிஇறக்கப்பட்டது. பின்பு மலையாள புத்தாண்டான விஷூ பண்டிகைக்கான வழிபாடு தொடர்ந்தது.
இந்நாளில் பழங்கள், தானியங்களை சந்நிதானத்தில் வைத்து புத்தாண்டின் முதல்நாளில் இதனை தரிசனம் செய்வது வழக்கம். இதற்காக நேற்று(ஏப்.13) பெரியபாத்திரத்தில் மா, வெள்ளரிக்காய், தேங்காய், உலர்ந்த அரிசி, நெல், பலா உள்ளிட்ட பல்வேறு வகையான பழங்கள், கண்ணாடி, காய்கறிகள் உள்ளிட்டவை பெரிய பாத்திரத்தில் வைக்கப்பட்டன.
இன்னொரு வெள்ளிக் கிண்ணத்தில் ரூ.1,2,5,10,20 புதிய நாணயங்கள் நிரப்பப்பட்டு ஐயப்பன் முன்பு வைக்கப்பட்டன. பின்பு நேற்று இரவு ஹரிவராசனம் பாடலுக்குப் பிறகு நடை சாத்தப்பட்டன. புத்தாண்டை முன்னிட்டு இன்று அதிகாலை 3 மணிக்கு தந்திரிகள் கண்டரரு ராஜீவரு, பிரம்மதத்தன்ராஜீவரு தலைமையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதரி கோயில் நடையைத் திறந்து வைத்தார்.
ஐயப்பன் முன்பு படைக்கப்பட்ட கனிகளை புத்தாண்டின் முதல்நாளில் பக்தர்கள் பலரும் ஆர்வமுடன் தரிசனம் செய்தனர். தொடர்ந்து தந்திரி கண்டரரு ராஜீவரு இவற்றை பக்தர்களுக்கு வழங்கினர்.பின்பு ஐயப்பன் முன்பு வைக்கப்பட்ட புதிய நாணயங்களை தந்திரி கண்டரரு ராஜீவரு மற்றும் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதரி ஆகியோர் பக்தர்களுக்கு வழங்கினர்.
பக்தர்கள் கூறுகையில், புத்தாண்டின் முதல்பார்வையாக மங்களகரமான காட்சியான விஷூ கனியை தரிசிப்பது அந்த ஆண்டு முழுவதும் வளமான வாழ்க்கை கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதே போல் ஐயப்பன் முன்பு படைக்கப்பட்ட புதிய நாணயங்களை பெறுவதால் வருடம் முழுவதும் பணப்பிரச்சினையின்றி செல்வவளம் பெருகும்.
இதற்காக இந்நாளில் தரிசனம் செய்ய வந்துள்ளோம் என்றனர். பின்பு வழக்கமான வழிபாடுகளுடன் மதியம் 1 மணிக்கு நடைசாத்தப்பட்டு மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. கடந்த 1-ம் தேதி மாலை திறக்கப்பட்டு வரும் 18-ம் தேதி வரை தொடர்ந்து வழிபாடுகள் நடைபெற உள்ளதால் ஏராளமான பக்தர்கள் ஆர்வத்துடன் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.