பாகிஸ்தானுடன் போர் அவசியமில்லை என்று நடிகர் விஜய் தேவரகொண்டா கருத்து தெரிவித்துள்ளார்.
சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்வு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் விஜய் தேவரகொண்டா, இயக்குநர் வெங்கி அட்லுரி உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டார். இந்த விழாவில் சூர்யாவின் படங்கள் தனக்கு எந்தளவுக்கு உதவியாக இருந்தது, எந்தளவுக்கு பிடிக்கும் என தனது பேச்சில் குறிப்பிட்டு பேசினார் விஜய் தேவரகொண்டார்.
அதனைத் தொடர்ந்து பஹல்காம் தாக்குதல் குறித்து பேசிய விஜய் தேவரகொண்டா, “தீவிரவாதிகளுக்கு மூளை இல்லை, அவர்களுக்கு கல்வி கற்பிக்கப்பட வேண்டும். பாகிஸ்தானுக்கு அடிப்படை உள்கட்டமைப்பு இல்லை, நாட்டுக்குள் அதன் சொந்த பிரச்சினைகளை கூட கையாள முடியவில்லை. ஆனால், காஷ்மீருக்காக இந்தியாவைத் தாக்கும் துணிச்சல் இன்னும் உள்ளது.
காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானது, காஷ்மீர் நம் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். இந்தியர்களாக, நாம் மனிதர்களாக இருந்து நட்பை வளர்க்க வேண்டும். பாகிஸ்தானுடன் இந்தியா போருக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்று உறுதியாக நம்புகிறேன். பாகிஸ்தானியர்கள் தங்கள் அரசாங்கத்தால் சலிப்படைந்து ஒருநாள் கிளர்ச்சி செய்வார்கள்” என்று குறிப்பிட்டார் விஜய் தேவரகொண்டா.