காரைக்குடி அருகே பள்ளத்தூரைச் சேர்ந்த இவர், சென்னையில் வருமான வரித்துறையில் உதவி ஆணையராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். மாற்றுத் திறனாளியான இவர், கிராமப்புற இளைஞர்களுக்காக தனது சொந்த ஊரான பள்ளத்தூரில் வாடகைக் கட்டிடத்தில் திறன் பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார். இதற்காக தான் ஓய்வு பெற்றபோது கிடைத்த பணத்திலிருந்து ரூ.30 லட்சம் செலவழித்துள்ளார். அங்கு பணிபுரியும் 5 பயிற்சியாளர்களுக்கு ஓய்வூதியத்தில் இருந்து ஊதியம் வழங்குகிறார்.
இங்கு இலவசமாக தட்டச்சு, சுருக்கெழுத்து, கணினி மென்பொருள் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கப்பட்ட இந்த மையத்தில் 105 கிராமங்களைச் சேர்ந்த 838 பேர் சேர்ந்துள்ளனர். அதில் 525 பேர் முழுமையாகத் திறன் பயிற்சி பெற்று வெளியேறியுள்ளனர். சிலர் பல்வேறு பணிகளிலும் சேர்ந்துவிட்டனர். இந்நிலையில், போட்டித் தேர்வுக ளுக்குத் தயாராவோருக்கு உதவ ரூ.25 லட்சம் மதிப்பிலான வீட்டைப் பயிற்சி மையமாக மாற்றியுள்ளார். அங்கு அடுத்த மாதம் பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளன.

