காட்டாங்கொளத்தூர்: தொழில் முனைவோராக செயல்பட்டு மாணவர்கள் அனைவரும் இந்தியாவின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் 21-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நிறுவன வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, எஸ்ஆர்எம் நிறுவனர் மற்றும் வேந்தர் டி.ஆர். பாரிவேந்தர் தலைமை தாங்கினார்.
துணைவேந்தர் பேராசிரியர் சி. முத்தமிழ்ச்செல்வன் வரவேற்புரை ஆற்றி ஆண்டு அறிக்கையை தாக்கல் செய்தார். சிறப்பு விருந்தினராக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்று பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் மனிதநேயம், மருத்துவம் மற்றும் சுகாதார அறிவியல், மேலாண்மை, சட்டம் மற்றும் வேளாண் அறிவியல் ஆகிய பிரிவுகளில் முனைவர், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ படிப்புகளை வெற்றிகரமாக முடித்த 15,105 மாணவ – மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். அகமதாபாத் இந்திய மேலாண்மை நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் பாரத் பாஸ்கருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

