
சென்னை: தனியார் பல்கலைக்கழக சட்ட மசோதா திரும்பப் பெறப்பட்டு உரிய மறுஆய்வு செய்யப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார்.
கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரின்போது அறிமுகப்படுத்தப்பட்ட தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்தம்) சட்ட மசோதா தொடர்பாக அமைச்சர் கோவி.செழியன் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்த) சட்டமசோதா குறித்து சமூக ஊடகங்களிலும், பொது வெளியிலும் பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இதுகுறித்து சில விவரங்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். அதிகமான எண்ணிக்கையில் உயர்கல்வி நிறுவனங்கள் தொடங்கப்படுவதற்கான தேவை உள்ளது. இந்தச் சூழ்நிலையில் தற்போது இயங்கிவரும் தனியார் கல்வி நிறுவனங்கள், மாநில தனியார் பல்கலைக்கழகங்களாக உயரும்போதும், புதிதாக தனியார் பல்கலைக்கழகங்கள் தொடங்குவதற்கும் சில வழிமுறைகளை எளிமைப்படுத்தும் நோக்கத்துக்காகவே இந்தச் சட்டமசோதா கொண்டு வரப்பட்டது.

