இதுதொடர்பாக தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் சுமித் நாகல் வெளியிட்டுள்ள பதிவில், “சீனாவின் செங்டு நகரில் நடைபெறவுள்ள ஆஸ்திரேலிய ஓபன் பிளே ஆஃப் சுற்றுப் போட்டியில் பங்கேற்க இருந்தேன். ஆனால், எனது விசா விண்ணப்பம் எவ்வித காரணமும் இன்றி நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தியாவிலுள்ள சீன தூதரக அதிகாரிகள் எனக்கு உடனடியாக உதவ முன்வரவேண்டும்” என தெரிவித்துள்ளார்.
சுமித் நாகலின் கோரிக்கைக்கு உடனடியாக சீன தூதரகத்திடமிருந்து எந்தவித பதிலும் கிடைக்கவில்லை. டென்னிஸ் தரவரிசையில் ஆடவர் ஒற்றையரில் சுமித் நாகல் 275-வது இடத்தில் உள்ளார். முதல் 100 இடங்களுக்குள் இல்லாததால் சுமித் நாகல், கிராண்ட்ஸ்லாம் போன்ற போட்டிகளில் நேரடியாக பங்கேற்க முடியாது. வைல்ட் கார்டு அல்லது தகுதிச் சுற்றுகளின் வாயிலாகவே போட்டிக்குள் நுழைய முடியும்.

